தமிழகத்தில் கோடை காலம்  நெருங்குவதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. மார்ச் 26 காலை 8:30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. வேலூர், பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, மதுரை, தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மேலும் ஒரு வாரத்திற்கு வெப்பநிலை வழக்கத்தை விட உயர வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.




 தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும், வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதியை நோக்கி தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் இருப்பதால் ஏப்ரல் 2ம் தேதி வரை சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.