TN Corona LIVE Updates: கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த வாரம் 30 ஆயிரம் என்ற அளவில் தினசரி கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில், நேற்று மாநிலத்தில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது, தமிழகத்தில் நேற்று புதியதாக 35 ஆயிரத்து 579 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 73 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 17 லட்சத்து 34 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 4 லட்சத்து 62 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 390 நபர்கள் ஆவர். சென்னையில் மட்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 667 ஆகும். மாநிலம் முழுவதும் மொத்தம் தொற்று உள்ளவர்களில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 33 ஆயிரத்து 741 ஆகும், பெண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 25 நபர்கள் ஆவார்கள், மூன்றாம் பாலினத்தவர் 38 நபர்கள் ஆவர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 19 ஆயிரத்து 919 நபர்கள் ஆவார். பெண்கள் 15 ஆயிரத்து 660 நபர்கள் ஆவார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 368 நபர்கள் ஆவர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்களாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 397 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement
21:04 PM (IST)  •  21 May 2021

கர்நாடகாவில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாவது அலை எட்டு மாநிலங்களில் மட்டுமே அதிகளவில் உள்ளதாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த எட்டு மாநிலங்களில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, கடந்த 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுக்குள் வராத காரணத்தால் அந்த மாநிலத்தில் வரும் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


 


 


 


 

20:17 PM (IST)  •  21 May 2021

முதன்முறையாக 467 நபர்கள் கொரோனா வைரசால் தமிழகத்தில் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியதாக பதவியேற்றுக் கொண்டுள்ள தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்தே வருகிறது.


தமிழகத்தில இன்று ஒரே நாள் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 36 ஆயிரத்து 184 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருப்பது  மக்கள் மத்தியில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளளது.


இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 4 லட்சத்து 68 ஆயிரத்து 262 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் 30 ஆயிரத்து 271 நபர்கள் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 நபர்கள் ஆகும். இன்று தொற்று உறுதியானவர்களில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்து 913 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிககப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவோர் உள்பட சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 782 ஆகும்.


தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 166 ஆகும். பெண்கள் 7 லட்சத்து 16 ஆயிரத்து 784 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 20 ஆயிரத்து 425 நபர்கள் ஆவார்கள். பெண்கள் 15 ஆயிரத்து 759 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று மட்டும் குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் 25 ஆயிரத்து 368 ஆகும். இதனால், மாநிலம் முழுவதும் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரத்து 283 நபர்கள் ஆவார்கள்.


தமிழகத்தில் நேற்று 397 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 168 பேர் தனியார் மருத்துவமனையிலும், 299 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.  தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 467 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 214 நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் மட்டும் 128 நபர்கள் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள்.


 

18:45 PM (IST)  •  21 May 2021

”கொரோனா இல்லை என்னும் நாளே மகிழ்ச்சியான நாள்” - முதல்வர் மு.க ஸ்டாலின்

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னையைப் போன்றே பிற மாவட்டங்களிலும் கொரோனா கட்டளை மையம் அமைக்க ஆலோசித்து வருகிறோம்.  தி.மு.க. ஆட்சியமைத்து கடந்த 2 வாரங்களில் மட்டும் 16 ஆயிரத்து 938 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 300 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வசதியைகொண்ட படுக்கைகள் ஆகும். மக்களிடம் நான் இறுதியாக கேட்பது எல்லாம் முகக்கவசம் அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள் என்பதுதான். தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. நம்மையும் காத்து, நம் நாட்டு மக்களையும் காப்போம் என்பதுதான் உறுதியான வேண்டுகோள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்

17:36 PM (IST)  •  21 May 2021

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா கொரோனாவால் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுந்தர்லால் பகுகுணா. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் அந்த மாநிலத்திலும், பிற மாநிலத்திலும் சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், 94 வயதான சுந்தர்லால் பகுகுணாவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

15:50 PM (IST)  •  21 May 2021

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களிடம் 10 ஆயிரம் அபராதமாக வசூல் - சென்னை மாநகராட்சி

தமிழகத்திலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக, மாநிலத் தலைநகரான சென்னை உள்ளது. சென்னையில் மட்டும் தினசரி 6 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற சென்னை மாநகராட்சி சார்பில் முன்களத் தன்னார்வலர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.


பொதுமக்கள் நலன் கருதி சென்னை மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிககை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒரு சிலர் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளை விட்டு வெளியே வருவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.


தொற்று பாதித்த நபர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டால் அவர்களிடம் இருந்து, முதன்முறை ரூபாய் 2 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும், அதனையும் மீறி மீண்டும் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களை சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, புகார்கள் இருப்பின் சென்னை மாநகராட்சிக்கு 044-2534520 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கும்படி ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இதுதொடர்பாக பெறப்பட்ட 12 புகார்கள் மீது வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 6 புகார்களில் விதிமீறல் இல்லை எனவும், ஒரு நோயாளி உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.


மீதமுள்ள 5 நபர்களிடம் இருந்து தலா ரூபாய் 2 ஆயிரம் வீதம் ரூபாய் 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு, அவர்கள் இனி வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி வெளியே வந்தால் கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:11 PM (IST)  •  21 May 2021

நாட்டின் 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணியவில்லை- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா முதல் அலையை காட்டிலும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமான பாதிப்பை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது. தினசரி 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு முக்கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் நாட்டில் 50 சதவீத மக்கள் இதுவரை முகக்கவசம் அணியவில்லை என்றும், முகக்கவசம் அணிந்தவர்களில் 64 சதவீதம் நபர்கள் முறையாக அணியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு நபர் சமூக விலகலை முறையாக பின்பற்றவில்லை என்றால், அந்த நபரால் 406 பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

13:22 PM (IST)  •  21 May 2021

கடலூரில் கொரோனா நோயாளி உயிரிழந்த சம்பவம் -  எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கண்டனம்

கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

12:54 PM (IST)  •  21 May 2021

தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 3ஆவது நாளாக முதலிடம்

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் 3ஆவது நாளாக முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 35,579 ஆக பதிவானதை சுட்டிக்காட்டிய மத்திய சுகாதாரத்துறை, பிற மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும் தமிழகத்தில் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

12:09 PM (IST)  •  21 May 2021

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்கள்

சென்னையில் 10 பேருக்கு மேல் கொரோனா தொற்றுள்ள 850 இடங்களும், 6 பேருக்கு மேல் தொற்றுள்ள 1,750 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளன. 3 பேருக்கு குறைவாகத் தொற்றுள்ள 6,500 இடங்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறியுள்ளது.

13:25 PM (IST)  •  21 May 2021

மதுரையில் கொரோனா சிசிச்சை மையம் திறப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அனைத்து படுக்கைகளும் தனித்தனி மின்விசிறி, ஆவி பிடிப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது.

11:15 AM (IST)  •  21 May 2021

மீண்டும் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 551 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் 2.67 லட்சம், நேற்று 2.76 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 2.59 லட்சமாக குறைந்துள்ள்து. 



இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சத்து 72 ஆயிரத்து 440-இல் இருந்து 2 கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து 122-ல் இருந்து 2 லட்சத்து 91 ஆயிரத்து 331-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சத்து 55 ஆயிரத்து 440இல் இருந்து 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது.


 

10:28 AM (IST)  •  21 May 2021

தமிழகத்துக்கு 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் - டி.ஆர். பாலு கோரிக்கை

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை நேரில் சந்தித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும், செங்கல்பட்டு ஆலையில் ரூ.300 கோடி முதலீடு செய்து தடுப்பூசி தயாரிப்பை தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

09:21 AM (IST)  •  21 May 2021

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நீட்டிப்பா? - மருத்துவ குழுவுடன் முதல்வர் நாளை ஆலோசனை

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை தடுக்கும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 24ஆம் தேதியுடன் நிறைவடைகிற்து. இந்நிலையில், கொரோனா தொற்றை பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.


நாளை காலை 10 மணிக்கு  முதலில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

08:50 AM (IST)  •  21 May 2021

மதுரையில் அகதிகள் முகாமில் 51 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த உச்சப்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 51 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

07:39 AM (IST)  •  21 May 2021

உலகளவில் 16.58 கோடி பேருக்கு கொரோனா

உலகளவில்  16.58 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 34.44 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 14.65 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 29,982 பேர் கொரோனாவால் பாதிப்பு; ஒரே நாளில் 659 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 83,367 பேர் பாதிப்பு, 2,527 பேர் உயிரிழப்பு. 

Sponsored Links by Taboola