தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு முன் ஜாமின் கிடைத்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இருவரும் வெளியே வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Continues below advertisement

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுவரை தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதனிடையே பெரும்பான்மை இல்லாத தவெக 5 கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இதனால் இந்த தவெக அரசு அடுத்த 6 மாதங்களில் கவிழ்ந்து விடும். விரைவில் தேர்தல் வரும் என்றெல்லாம் திமுக தொடர்ச்சியாக கூறி வருகிறது. இப்படியான நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். 

Continues below advertisement

இந்த நிலையில் தங்களிடம் பேரம் பேசி திமுகவில் இணையுமாறு சிலர் தொடர்ச்சியாக வற்புறுத்தி வருவதாக ஊத்தங்கரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதி திட்டத்துக்குப் பின்னால் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருவர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ளனர். லுக் அவுட் நோட்டீஸ் மற்றும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் இருவரும் ஆஜராகவில்லை. 

கிடைத்தது முன்ஜாமின்

இந்த நிலையில் செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியது. இருவரும் தினம்தோறும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி, அசோக் குமார் இருவரும் வெளியே வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் செந்தில் பாலாஜியை கைது செய்யும் பணியும் ஒரு பக்கம் சத்தமே இல்லாமல் நடந்து வருகிறது. அவர் வேறு ஏதாவது வழக்கில் கைது செய்யப்பட அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் நிபுணர்கள் காத்திருக்கின்றனர். 

Also Read: AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேசுகையில், “ஆட்சியைக் கவிழ்க்க சதி என சொல்லப்பட்டு வந்தாலும் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பது என்பது தானாகவே அரசை கவிழ்க்கும் செயலாகாது. காவல்துறை புகாரில் அரசை கவிழ்க்க வேண்டும் என கூறவில்லை என வாதிட்டோம். இதன்பின்னர் அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் அரசை கவிழ்க்கும் சதி என்ற வார்த்தையை நீக்கி விட்டனர். இதனால் முதல் தகவல் அறிக்கை நீர்த்து போனது. திமுக மற்றும் செந்தில் பாலாஜி மீது அரசியல் ரீதியாகக் கலங்கம் விளைவிக்கவே காவல்துறை இந்த வழக்கில் இல்லாத நடைமுறையை செய்துள்ளது என வாதிட்டதாகவும், அதை கருத்தில் கொண்டு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.