Ramesh TVK: மகன் ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சர்.. அப்பா அர்ச்சகர்.. எந்த கோயில் தெரியுமா?
அமைச்சர் ரமேஷ் சிறு வயதிலிருந்தே விஜய் ரசிகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்திலும் ஆக்டிவாக செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷின் குடும்ப பின்னணி பற்றி காணலாம்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ரமேஷ்
2026 சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ரமேஷ் சுமார் 33,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் திமுக, அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியிருந்தார். இந்த நிலையில் தவெக அரசு பொறுப்பேற்று விஜய் முதலமைச்சரானார். அவரின் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த துறை ஒதுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய் யாருக்கும் சாதி,மதம், பணம் பார்த்து பொறுப்பு வழங்கவில்லை என தெரிவித்தார்.
கோடிக்கணக்கான தம்பிகள் முகம் காண தவமிருக்க, உங்கள் அருகில் நானிருக்க வரம் கொடுத்த வள்ளலே! அண்ணனே!! என் உயிரே!!! @actorvijay | @BussyAnand pic.twitter.com/WDOFKSbOs1
— TVK Ramesh (@RameshOffcl) November 9, 2021
ரமேஷின் குடும்ப பின்னணி
31 வயதான பொறியியல் பட்டதாரியான ரமேஷ் தனது குடும்பத்தினருடன் சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரில் வசித்து வருகிறார். அவரது தந்தை சீனிவாசன் கோயில் அர்ச்சகராக மறைமலை நகரில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு கோயிலில் மாதம் ரூ.5,000 சம்பளத்திற்கு பணியாற்றி வருகிறார். தாயார் சுமதி சமையல் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் மறைமலை நகரில் இருந்து மயிலாப்பூருக்கு வந்து செல்கிறார். இதற்காக 90 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்.
அமைச்சர் ரமேஷ் சிறு வயதிலிருந்தே விஜய் ரசிகராக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்திலும் ஆக்டிவாக செயல்பட்டுள்ளார். பின்னர் தவெகவில் இணைந்து எம்.எல்.ஏ.,வாகி தற்போது அமைச்சராகவும் மாறியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் 1995ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளார். தனியார் அறக்கட்டையின் கீழ் செயல்பட்டு வந்த சிவ விஷ்ணு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வீடு ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வாகன நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த ரமேஷ் தற்போது அமைச்சரானதால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் மனைவி மற்றும் ஆறு மாத கைக்குழந்தையுடன் குடியேறவுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் மறைமலை நகரில் உள்ள வீட்டில் வாழ்க்கையை தொடரவுள்ளதாக சொல்லப்படுகிறது. ரமேஷூக்கு இரண்டு தம்பிகள் உள்ள நிலையில் அவர்கள் டிப்ளமோ வரை படித்துள்ளனர். இருவரும் தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். முதலமைச்சர் விஜய் எளிய குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வந்த பலரையும் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளார். அந்த வகையில் அமைச்சர் ரமேஷூம் சிறப்பாக செயல்படுவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Before You Go
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
ட்ரெண்டிங் செய்திகள்






















