Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
"தமிழ்நாட்டில் எஸ்.பி.அந்தஸ்தில் NIA-வில் இணைந்த முதல் IPS அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் தர்மராஜன் ஐபிஎஸ், இவரைதான் தன்னுடைய பாதுகாப்பு படையின் தலைமை அதிகாரியாக நியமித்திருக்கிறார் முதல்வர் விஜய்”

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். முக்கிய பதவிகளுக்கு திறமையான அதிகாரிகளை தேர்வு செய்து முதலமைச்சர் விஜய் நியமித்து வருகிறார். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக தர்மராஜன் ஐபிஎஸ்
இந்நிலையில், மிக முக்கியமான பணியிடமான முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரியாக தர்மராஜன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். உளவுத்துறை (பாதுகாப்பு) டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டிருக்கும் தர்மராஜன் ஐபிஎஸ், முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு படை பிரிவின் தலைவராக செயல்படவுள்ளார்.
யார் இந்த தர்மராஜன் ஐபிஎஸ்
தமிழ்நாட்டின் கடைகோடி மாவட்டமான ராமநாதபுரத்தின் பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தனித் திறமை, முயற்சியால், பல கட்ட போராட்டங்களைக் கடந்து ஐபிஎஸ் அதிகாரியாக நேரடியாக தேர்வானவர் தர்மராஜன். 2009 ஐபிஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், தான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் சாதாரண, கடைநிலை மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும், சட்ட ஒழுங்கை பாதுகாப்பதிலும் பெயர் போனவர்.
முதல் போஸ்டிங்கிலேயே மாஸ் காட்டிய அதிகாரி
காவல்துறை மீதான ஈர்ப்பும் பற்றுதலின்காரணமாக ஐபிஎஸ் பணியை தேர்வு செய்தவர் தர்மராஜன். அவர் தொடக்கத்தில் ASP –ஆக பணியாற்றிய திருப்பத்தூர், குளச்சல், நீலகிரி உள்ளிட்ட இடங்களில் ரவுடிகளுக்கும் சட்டவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுவோருக்கும் சிம்மப்சொப்பனமாக இருந்தவர். இவர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி தொடங்கியபோதே, குற்றங்கள் நடப்பதற்கு முன்னராக அதனை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, செயின் பறிப்பு, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் மாவட்டத்தில் வெகுவாக குறைந்ததற்கு காரணமாக இருந்து மக்களின் பாரட்டை பெற்றவர். குறிப்பாக, இரவு மட்டுமின்றி பகலிலும் காவல்துறையினரின் ரோந்தை அதிகரித்து குற்றச்செயல்களை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்தது இவர் மீது கவனம் பெற வைத்தது.
NIA –வில் சேர்ந்த முதல் தமிழக எஸ்.பி
சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக பணியாற்றியபோதும் தன்னுடைய சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தனித்தனியாக சந்தித்து, மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, அவர்களை தொடர்ந்து கண்காணித்து குற்றச்செயல்களை குறைத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பான NIA-வில் இணைந்தார். இதன்மூலம், தமிழ்நாட்டில் எஸ்.பி.அந்தஸ்தில் NIA-வில் இணைந்து பணியாற்றிய முதல் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். சென்னை மண்டல மத்திய புலனாய்வு அமைப்பின் எஸ்.பி.யாக பணியாற்றியபோது, தென்மாநிலத்தில் பயங்கரவாதிகளால் தீட்டப்பட்ட சதித் திட்டங்களை ரகசியமாக முறியடித்த பெருமைக்குரியவர்.
மீண்டும் தமிழக பிரிவுக்கு திரும்பிய தர்மராஜன்
அதன்பின்னர், மீண்டும் தமிழக காவல்துறைக்கு திரும்பிய தர்மராஜன், சென்னை மாநகர காவல்துறையின் கிழக்கு மாவட்ட இணை ஆணையராக சிறப்பாக பணியாற்றினார். தமிழக உளவுத்துறையை போன்ற சென்னை மாநகர காவல்துறைக்கென தனி உளவு அமைப்பு இருந்த நிலையில், அதனுடைய தலைமையை ஏற்றும் பல்வேறு முக்கிய பணிகளை செய்தவர் தர்மராஜன். கடைசியாக, வேலூர் சரக டி.ஐ.ஜியாக பொறுப்பேற்று வழக்கம்போல தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்துகொண்டிருந்தவரின் திறமையை கண்டு தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியாக தமிழக உளவுத்துறையின் டி.ஐ.ஜி-யாக நியமித்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
Core Cell பிரிவின் தலைவர்
தமிழக உளவுத்துறை பாதுகாப்பு டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டிருக்கும் தர்மராஜன், முதலமைச்சரின் பாதுகாப்பிற்கென்றே உருவாக்கப்பட்ட Core Cell எனப்படும் பாதுகாப்பு படையின் தலைவர் பொறுப்பை ஏற்று செயல்படவிருக்கிறார். இந்த பொறுப்பை பெற பல ஐபிஎஸ் அதிகாரிகள் முட்டிக் மோதிக்கொண்டிருந்த நிலையில், என்.ஐ.ஏ-வில் பணியாற்றிய அதிகாரியான தர்மராஜனுக்கு அந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















