அதிமுகவில் இன்று பல பரபர சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஒருபக்கம் பொதுக்குழு , மறுபக்கம் அதிமுக அலுவலகம் சூறை, பொதுச்செயலாளரான ஈபிஎஸ், ஓபிஎஸ்-ஐ நீக்கிய ஈபிஎஸ், ஈபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ் என அடுத்தடுத்து ட்விஸ்டுகள் அரங்கேறி வந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் திருமண விழாவில் பேசிய சசிகலா அதிமுக குறித்தும், இன்றைய சம்பவம் குறித்தும் அதிரடியாக பேசினார்.


விழாவில் பேசிய அவர்,''இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தனிப்பட்ட சுயநலத்தால் செய்யக்கூடிய கூட்டமாக தான் நான் கருதுகிறேன், இன்று நடைபெற்ற பொதுக்குழு நிச்சயமாக செல்லாது ஏனென்றால் நான் உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கு நிலுவை இருக்கும் பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தக்கூடாது தவறானது.இபிஎஸ்சே பொதுச் செயலாளரானது என்பது கேள்விக்குறியாக இருக்கும் பொழுது அவர் ஓபிஎஸ்சை நீக்கியது எப்படி செல்லும், நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அதிமுக தொண்டர்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்.


அதிமுக பொதுவான இயக்கம் திமுகவில் ஏற்பட்ட தவறான நிலை காரணமாகத்தான் எம்ஜிஆர் தனி கட்சியை தொடங்கினார், தனக்கு ஏற்பட்ட நிலை தான் தொடங்கும் கட்சியில் யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் அடிமட்ட தொண்டர்களால் தான் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார், இப்போது இவர்கள் அந்த முறையில் செயல்படவில்லை என்பதுதான் என் கருத்து, அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை, அதிமுகவிற்கு இவ்வளவு நாள் வாக்களித்த பொதுமக்களும் ரசிக்கவில்லை,




ஓபிஎஸ்ஐ ஒருங்கிணைப்பது காலம் ஒரு சூழ்நிலையில் முடிவு செய்ய வேண்டிய விசயம், ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் கையில் தான் கட்சியை நிறுவிய எம்ஜிஆர் ஏற்படுத்தியிருந்தார்‌, ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுக்கக்கூடிய முடிவுதான் இறுதியானது அதுதான் வெற்றியும் பெறும், பொருளாளராக ஓபிஎஸ் இருக்கிறார். நான் பல பொதுக்குழுவில் பங்கேற்றுள்ளேன் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளேன். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கையை பொருளாளர் தான் வாசிக்க வேண்டும், அப்படி இருக்கையில் இதை எப்படி பொதுக்குழு என்று ஏற்றுக்கொள்ள முடியும்.


நிழலுக்காக சண்டை இடுகின்றனர் ஆனால் நிஜம் என்ன என்று விரைவில் தெரியும், அதிமுக தொண்டர்கள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் தான் அதிமுகவின் பொதுச் செயலாளராக வரமுடியும் அதுதான் அதிமுகவின் தலைவர்கள் விட்டுச் சென்ற வழிமுறைகள் சட்டதிட்டங்கள், அதன்படி தான் அதிமுக என்ற இயக்கம் இயங்கும் அது நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கை தனக்கு முழுமையாக உள்ளது, அதிமுகவின் தொண்டர்களும் பொதுமக்களும் தன்னை தான் ஆதரிக்கின்றனர் அது நான் மேற்கொள்ளும் சுற்றுப் பயன்களில் எனக்கே வெளிச்சமாக தெரிகிறது, 


நான் பெங்களூர் சிறையில் இருந்து வந்த நாள் முதல் இன்றும் சரி நாளையும் சரி நான் சொல்லக்கூடியது ஒரே கருத்து தான் நான் அவர்கள் மாதிரி இன்று ஒன்று சொல்வது நாளை ஒன்று சொல்வது என்று நான் நிச்சயம் செய்ய மாட்டேன். அதன்படி நான் இல்லாத சமயங்களில் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிரிந்து சென்றிருக்கலாம், ஆனால் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரே அதிமுகவாக ஒருங்கிணைத்து வருங்காலத்தில் செயல்பட்டு வெற்றி பெறுவோம் ஆட்சி அமைப்போம், ஜெயலலிதா கூறியதைப் போல மக்களால் நான் மக்களுக்காக நான் என்று அனைவரும் வாயளவில் பேசுபவர்கள் பலர் இருக்கின்றனர் நான் என் மனதளவில் வைத்துள்ளேன் ஜெயலலிதா கூட இருந்த தங்கையாக அதை நான் நிறைவேற்றுவேன்.


தொண்டர்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு தான் உருவாக்கப்பட்ட தலைவர்கள் வரவேண்டும்,வரவும் முடியும் என்றார்.