மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.


திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். இந்த மது ஒழிப்பு மாநாட்டில், அரசமைப்புச் சட்டம் 47-இல் கூறியபடி மதுவிலக்குச் சட்டத்தை இயற்ற வேண்டும். மதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்பவை உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தீர்மானங்கள்



  1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்ற வேண்டும்.

  2. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிடவேண்டும்.

  3. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்.

  4. மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திடவேண்டும்.

  5. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடவேண்டும்.

  6. மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.

  7. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

  8. மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

  9. மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடவேண்டும்.

  10. டாஸ்மாக்கில் பணிபுரியும் சற்றேறக்குறைய 30 ஆயிரம் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிடவேண்டும்.

  11. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கும், மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.

  12. மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ளவேண்டும்.

  13. அய்யா வைகுண்டர் பிறந்தநாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


திமுகவை நிறுவிய அண்ணா, மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார்.


 “இளம்வயதில் ஒருவருக்கு மது மற்றும் போதைப் பழக்கம் வந்தால் மனித வளம் அழியும். இதை உணர்த்தவும், மதுவிலக்கை அமல்படுத்தவே நம் மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால் நம் மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிலர் சிதைத்துவிட்டார்கள். திமுகவை நிறுவிய அண்ணா, மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்தார். அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள் என பேசினார்.


காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம்..


காந்தியடிகளின் கொள்கைகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் 2 கொள்கையில் நமக்கு உடன்பாடு உண்டு; ஒன்று மதச்சார்பின்மை மற்றொன்று மதுவிலக்கு. காந்தியின் உயிர்மூச்சுக் கொள்கையில் ஒன்று மதுவிலக்கு; அதனால் தான் அவர் பிறந்த நாளில் இந்த மாநாட்டை விசிக நடத்துகிறது என திருமாவளவன் தெரிவித்தார்.