சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி கருணாநிதியால் தொடங்கப்பட்ட வருமுன் காப்போம் திட்டத்தால் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்றனர். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அத்திட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்தார்கள். இந்தியா முழுவதும் பாராட்டப்பட்ட அத்திட்டத்தை மேம்படுத்தி கூடுதல் மருத்துவ வசதியுடன் கடந்த வாரம் சேலத்தில் செப்டம்பர் 29-ந் தேதி தமிழக முதல்வரால் மீண்டும் தொடங்கப்பட்டு ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்திட்டம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 50 மருத்துவ முகாம்களில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 4 மணி வரை நடைபெற உள்ளது. சென்னையில் 2 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் 17 அரங்குகளில் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. மருத்துவத்துறையின் செயல்பாடுகள், விழிப்புணர்வு என்கிற வகையில் 20க்கும் மேற்பட்ட சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.




பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை, குழந்தை நலம் மகப்பேறு மருத்துவம், குழந்தை நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சளி பரிசோதனை, மலம் பரிசோதனை, கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசியும் வழங்கப்பட  இருக்கிறது. மேல் சிகிச்சைகள் தேவைப்படுவோர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகறிார். முதலமைச்சரின் காப்பீடு திட்டத்திற்கு அட்டைகளும் இம்முகாம்களில் வழங்கப்பட இருக்கிறது.


கோவாக்சின் தடுப்பூசிகள் 6 லட்சம் பேரும், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் 19 லட்சம் பேரும் என மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் இருந்தனர். நேற்று 11 லட்சத்து 2 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இன்று மட்டும் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல தடுப்பூசி மையங்கள் செயல்படும்.




மருத்துவ கல்லூரிகளில் 850 மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு்ளது. மீதமுள்ள 800 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கான ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இந்த மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் கட்டுமானங்களை மருத்துவ கல்லூரி இயக்குநர் தலைமையில் டெல்லிக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். அவற்றில் நான்கு மருத்துவ கல்லூரிகளுக்கு ஆய்வுக்கு வரச்சொல்லியிருக்கிறோம். அவர்களும் வருவதாக உறுதியளித்துள்ளார்கள்.


 தமிழக மக்கள் யாரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லவில்லை. ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்ட 1,800 பேரை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆதரவற்றோரைக் கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாராஷ்ட்ராவில் இருந்து வந்து இரவில் மட்டும் மெரினா கடற்கரையில் தங்கிவிட்டு, பகலில் வியாபாரத்திற்காக வெளியில் சென்றுவிடும் நரிக்குறவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விடியற்காலை சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.




மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 1,777 பேருக்கும், வீடற்றவர்கள் 2 ஆயிரத்து 247 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 48 பேருக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3 லட்சத்து 92 ஆயிரத்து 895 நபர்களுக்கும், கர்ப்பிணித் தாய்மார்கள் 4 லட்சத்து 84 ஆயிரத்து 918 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், சேற்றுப்புண் இவற்றுக்காகத்தான் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்தவாறு மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் இனி நடத்தப்பட இருக்கின்றன”


இவ்வாறு அவர் கூறினார்.