Vadapalani to Poonamallee metro train: ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?
Vadapalani to Poonamallee metro train: சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த வடபழனி- பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவையானது தொடங்கப்படவுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பணி நேரங்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்பட்டது. தற்போது சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம், கிண்டி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம் என முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில்
இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கிய வழித்தடமாக இருப்பது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டமாகும். இந்த வழித்தடத்தில் 99% பணிகள் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக கட்டமைப்பு வசதிகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து இத்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள், பயணிகளுக்கான வசதிகள் என இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்றதையடுத்து கடந்த வாரம் இறுதி கட்ட சோதனையானது நடைபெற்றது.
ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி
எனவே இந்த வழித்தடத்தில் போரூரில் தொடங்கி வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. ஆனால் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் முடிவடையாத காரணத்தால் எந்த இடத்திலும் மெட்ரோ ரயிலை நிறுத்தாமல் தற்காலிகமாக மெட்ரோ ரயில் வடபழனி முதல் போரூர் வரை இயக்கப்படவுள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதற்கான தேதியானது அறிவிக்கப்படவுள்ளது.























