Udhayanidhi Stalin: உங்க கூட்டணியை பயப்படாம இருக்க சொல்லுங்க.. பிரதமருக்கு உதயநிதி பதிலடி!
மதுரையில் பேசிய பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் விவகாரம், தமிழ்நாட்டை காங்கிரஸ் வஞ்சித்தது, திமுக ஆட்சியில் மோசடி என பல நிகழ்வுகளை குறிப்பிட்டு உரையாற்றினார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

உங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் என கூட்டணி கட்சிகளிடம் சொல்லுங்கள் என பிரதமர் மோடிக்கு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாத காலம் மட்டுமே உள்ளது. இப்படியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் விவகாரம், தமிழ்நாட்டை காங்கிரஸ் வஞ்சித்தது, திமுக ஆட்சியில் மோசடி என பல நிகழ்வுகளை குறிப்பிட்டு உரையாற்றினார்.
சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் துறைமுகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4000 இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
— Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) March 2, 2026
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், கழகமும் - கழக அரசும்… pic.twitter.com/fI1iyOHkME
இந்த நிலையில் சென்னையில் துறைமுகம் பகுதியில் சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 4000 இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்னர் விழா நடைபெறும் இடத்தில் இருந்த பெரியார் படத்தை எடுக்க சொன்னார்கள். அதையும் கேட்டு அடிமை கூட்டம் எடுத்து விட்டு அதில் பாஜக சின்னத்தை வைத்தார்கள். அதனால் தான் அடிக்கடி முரட்டு தொண்டர்கள், பக்தர்களை பார்த்திருப்பீர்கள், இந்தியாவில் முரட்டு அடிமைகளை எடப்பாடி பழனிசாமி உருவத்தில் தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் அண்ணாவின் பெயரை எடுத்து விட்டு அமித்ஷாவின் பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி வைத்து விடுவார்.
நான் சில நாட்கள் முன்பு இளைஞரணி செயலாளர் மாநாட்டில் பேசும்போது, எங்களை எல்லாம் அதிமுக மாதிரின்னு நினைச்சிட்டு சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வச்சிட்டு மிரட்ட பார்க்குறீங்க.. மோடியை பார்த்தும் திமுக கூட்டம் பயப்படாது” என சொன்னேன். இதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “என்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இது ஜனநாயக நாடு” என கூறினார்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் அவர்களே எங்களிடம் அந்த பதிலை சொல்ல வேண்டாம். உங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் சொல்லுங்கள். பாஜகவால் மிரட்டி சேர்க்கப்பட்ட கட்சிகள் தான் அந்த கூட்டணியில் உள்ளது. தமிழ்நாட்டை பாதுகாக்க திமுக தலைவர், தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.























