ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடையுடன் இருந்த புகைப்படம் சர்ச்சையான நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் மற்றும் ஆளுநரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Continues below advertisement

"வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாளா?" - உதயநிதி கேள்வி

தமிழ்நாடு அரசு, தை மாதம் இரண்டாம் நாளை அதிகாரப்பூர்வமாக 'திருவள்ளுவர் நாள்' என அரசாணை பிறப்பித்து ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் 'வைகாசி அனுஷம்' தான் உண்மையான திருவள்ளுவர் நாள் எனக் கூறி புது வடிவில் விழா நடத்தப்பட்டிருப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார். "ஜனவரி மாதத்தில் அரசு அதிகாரப்பூர்வமாக கொண்டாடும் போது, வைகாசி அனுஷம் தான் வள்ளுவர் நாள் என்ற புதிய உருட்டு எங்கிருந்து வந்தது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் பாசிஸ்டுகள்

கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் இருந்தபோது, இதேபோல திருவள்ளுவருக்கு காவி ஆடை அணிவிக்க முயன்ற அப்போதைய ஆளுநரின் நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. கொள்கை ரீதியாக 'சங்கிகளை' திருத்திய வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு என்று சுட்டிக்காட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், தற்போது மீண்டும் தமிழர்களின் சுயமரியாதையை உரசிப் பார்க்கும் வேலைகள் ஆளுநர் மாளிகையில் அரங்கேறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். வள்ளுவரைத் தொடர்ந்து அவமதிக்கும் பாசிஸ்டுகளின் இத்தகைய போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் முழங்கியுள்ளார்.

"முசலமைச்சர் சைலண்டாக இருப்பது ஏன்?" -

டெல்லிக்குச் செல்லும்போது "தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதி கொடுங்கள்" என்று பயந்து நடுங்கி அனுமதி கேட்டது போல, தற்போதைய முதலமைச்சர் இந்த விவகாரத்திலும் பயந்து நடுங்கக் கூடாது என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தான் தமிழக முதலமைச்சர் அமைதியாக (Silent) இருக்கிறார் என்றால், கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி பெயிண்ட் அடிக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கவும் அவர் தயங்குவது ஏன்? என்ற கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

எப்போதுமே 'மியூட்' (Mute) மோடில் இருக்கும் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார் என்கிற தைரியத்தில்தான், ஆளுநர் மாளிகை இத்தகைய துணிச்சலான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, பாசிஸ்டுகளுக்குப் பாய் விரிக்கும் தற்போதைய 'Sofa Model' அரசுக்குத் தனது கடுமையான கண்டனங்களை உதயநிதி ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.