”உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை போரடித்துவிட்டது, சேப்பாக்கம் சேகுவேரா இப்போது எங்கே எனத் தெரியவில்லை” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சென்னை அண்ணாசாலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் இழப்பு பாமவிற்குத்தான். யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப்போட்டி என முடிவெடுத்தார்கள் என தெரியவில்லை. பாமக முடிவெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதிமுகவை விமர்சிக்க அவர்களுக்கு உரிமையில்லை. அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றி பாமக பேச வேண்டிய அவசியமில்லை” என்றார்.




மேலும், ”தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றும், இதன் தாக்கம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்ற அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டப்பேரவை போரடித்துவிட்டது, சேப்பாக்கம் சேகுவேராவை எங்கே எனத் தெரியவில்லை” என்றும் கூறினார்.


 








9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என நேற்று அறிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்மூலம், அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.


9 மாவட்ட இடைத்தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று  மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது. அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.