தமிழக வெற்றிக்கழகம் தனது உறுதி மொழியை வெளியிட்டுள்ளது. இந்த உறுதிமொழியை விஜய் முன் மொழிய தொண்டர்கள் வழி மொழிந்தனர். 


”நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். 


நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன். 


சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைபிடிப்பேன் என உளமார உறுதி கூறுகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.