TVK Vijay: "விஜய் கைவிட்டுவிட்டார்.. தைரியம் இல்லாதவர்.." சரமாரியாக குற்றம் சாட்டிய புலி பட தயாரிப்பாளர்!
விஜய்யை விட்டு விலகியது ஏன்? அவரை விமர்சிப்பது ஏன்? என்பதற்கு அவரது முன்னாள் மேலாளரும், புலி தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார்.

விஜய்யின் முன்னாள் மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் பணியாற்றிய இவர் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார். இவர் தனியார் வார இதழுக்கு அளித்த பேட்டியில் விஜய்யை சரமாரியாக விமர்சித்தார்.
உழைப்பால்தான் வளர்ந்தேன்:
அதில் அவர் கூறியிருப்பதாவது, "பல படங்களுக்கு வேலை செய்திருக்கிறேன். என் உழைப்பால்தான் நான் வளர்ந்தேன். விஜய்யுடன் 27 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். விஜய்யின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்த முதல் நபர் நான். அவரின் மக்கள் இயக்கத்தை கட்டமைத்தது, திரைப்பட வெளியீடுகளில் இருந்த சிக்கல்களை தீர்த்தது, வியாபார வர்த்தகம், குடும்ப விவகாரங்கள் என அனைத்திலும் முன் இருந்துள்ளேன்.
கைவிட்ட விஜய்:
விஜய் ஹீரோவாக இருக்கும்போதே என்னை மறந்துவிட்டார். மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் நான் இருந்தபோது, விஜய் என்னைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அந்த வலியால்தான் பேசுகிறேன். புலி திரைப்படத்தை நான் தயாரித்தேன். படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் வரை விஜய் வீட்டில் விருந்து சாப்பிட்டேன்.
படத்தின் வெளியீட்டிற்கு முதல் நாள் ரெய்டு வருகிறது. ரெய்டு வந்தபோது விஜய் என்னை கைவிட்டுவிட்டார். ரெய்டுக்கு வந்தவர்களே விஜய்யுடன் இருந்தவர்கள்தான் புகார் கொடுத்தார்கள் என்று கூறினார்கள். அன்று அந்த ரெய்டுக்கு காரணமாக இருந்தவர்கள் இன்றும் விஜய்யுடன் இருக்கிறார்கள். விஜய்யிடம் அதைப் பற்றி சொல்வதற்கு கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
கரூர் சம்பவம்:
பிரச்சினை என்று வந்தபோது என்னை நட்டாற்றில் விட்டால் நான் என்ன செய்வேன்? அவரது பாதுகாப்பைத்தான் விஜய் எப்போதும் பார்ப்பார். திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் அது தெரியும். கரூர் சம்பவத்திலும் அவர் அதைத்தான் செய்தார். விஜய்யின் அப்பா வெளியேற்றப்பட்டதற்கும், நான் வெளியேற்றப்பட்டதற்கும் விஜய்யைச் சுற்றியிருக்கும் சதிக்கூட்டம்தான் காரணம்.
அழுதுவிடுவார்:
தனக்கு ஒரு பிரச்சினை என்றால் விஜய் அழுதுவிடுவார். ஜெயலலிதாவிடம் தலைவா பட பிரச்சினையின்போது அழுதார். கருணாநிதியிடம் போக்கிரி படத்தின் பிரச்சினையின்போது அப்பாவி போல நின்றார். எடப்பாடி பழனிசாமியிடம் மாஸ்டர் படத்திற்காக நின்றார். எந்த விஷயத்திலும் விஜய் தைரியமாக நிற்கமாட்டார். அவரைச் சுற்றியிருக்கும் கூட்டம் அவரை தவறாக வழிநடத்துகிறது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்துள்ளார்.
இவர் விஜய்யின் மக்கள் தொடர்பு அலுவலராகவும், மேலாளராகவும் பணியாற்றியவர். மேலும், மற்ற நடிகர்களின் படங்களுக்கும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சமீபத்தில் திமுக-வுடன் இணைந்து பணியாற்றி வரும் இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். கன்னியாகுமரி தொகுதியில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.





















