TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Thanjavur Meeting: இன்று தஞ்சாவூர் தவெக கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், தேர்தலை முன்னிட்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

இன்று தஞ்சாவூர் தவெக கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜய், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி முதல், விவசாய குடும்பங்களின் குழந்தைகள் படிப்பு செலவை அரசு ஏற்பது வரை பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மற்றவர்களைப் போல் இது வாக்குறுதி என்று கூறி ஏமாற்றும் வேலை அல்ல என்றும், நாம்(தவெக) ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் என்பதற்கான உறுதிமொழி என்றும் கூறினார்.
விஜய் அளித்த வாக்குறுதிகள் என்னென்ன.?
டெல்டா விவசாயிகள் சமீபத்தில் உரத் தட்டுப்பாட்டை சந்தித்த நிலையில், சிலர் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலை விற்ற செய்திகள் கூட வந்ததென கூறிய அவர், நாம் ஆட்சிக்கு வந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.
5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தும், உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.
திமுக சொன்னது போல் எல்லோருக்கும் என்று சொல்லிவிட்டு, அதில் தகுதி வைத்து பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம் என்றும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்வோம் எனவும் விஜய் கூறினார்.
மேலும், 2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலம் அற்றவர்கள் குடும்பத்தில், யாரும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்களாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து விகையான படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும் என வாக்குறுதி அவர் அளித்தார்.
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும், மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை உங்களுடைய தவெக ஆட்சி முழுமையாக நிராகரிக்கும் என்ற வாக்குறுதியை அளித்தார். எப்போது விவசாயிகளின் பக்கம் நமது ஆட்சி நிற்கும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை பார்த்துக்கொண்டு அரசு சும்மா இருக்காது. போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்து பொருட்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.
மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை மத்திய அரசிற்கு தவெக அரசு கொடுக்கும்.
“நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்குதான் தவெக அரசு முக்கியத்துவம் கொடுக்கும்“ என்று விஜய் தெரிவித்தார்.
“பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுக்கணும். அரசு வேலை வாய்ப்புகள் மட்டுமல்லாமல், தனியார் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும், உத்தரவாதத்தையும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கிவிட்டாலே, நமது இளைஞர்கள் அவர்களுக்கான பாதையை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள்“ என்பதே தவெக அரசின் நோக்கமாக இருக்கும் என்று விஜய் கூறினார்.
இத்தனை கோடி, அத்தனை கோடி ஒப்பந்தம் என்று கூறி விளம்பரம் மட்டும செய்யாமல், உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதை செயல்படுத்தினாலே எல்லாம் தன்னாலேயே நடக்கும் என்றும் அவர் கூறினார்.























