தவெக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதிய தலைவர் விஜய், அவர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இருசக்கர  வாகனப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தவெக எனப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்.27) விக்கிரவாண்டியில், வி.சாலையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னெடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவெகவின் முதல் மாநாட்டில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்


இந்த நிலையில் தொண்டர்களுக்கு அவ்வப்போது தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி வருகிறார். அந்த வகையில் தவெக தொண்டர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் இருசக்கர  வாகனப் பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:


’’என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப் போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.


இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று


ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.


போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும்.


அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்


நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.


தோழமையுடன், உங்கள் விஜய்’’


இவ்வாறு தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.