தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தவெக-வின் அமைச்சரவையில் செங்கோட்டையன் தவிர மற்றவர்கள் அனைவரும் அமைச்சரவைக்கு புதியவர்கள் ஆவார். இவர்களுக்கு நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று கட்சித் தலைமையில் இருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

ஹேக் செய்யப்பட்ட அமைச்சர் போன்:

இந்த சூழலில், அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் தனது செல்போனில் அடிக்கடி சார்ஜ் இறங்கிவிடுவதாக கூறி அதை சரி செய்தபோது, அவருக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. அதாவது, அமைச்சரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக்கேட்கப்பட்டு வந்துள்ளது என்பேத அந்த உண்மை. 

இதையடுத்து, விசாரித்தபோது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சர்வரில் இருந்து இந்த செல்போன் ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி பல அமைச்சர்களின் செல்போன்களும் இதுபோல ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Continues below advertisement

ஒட்டுக்கேட்பு:

முக்கியமான அமைச்சர்களின் செல்போன்களில் மைக்ரோஃபோனை ஹேக் செய்ததால், அவர்களின் செல்போன் அழைப்புகள் எதிர்தரப்பில் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அஃப் மூலமாக பேசப்பட்ட கால்களும் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமைச்சர்கள் பலரும் கட்சி மற்றும் அரசியல் ரீதியான பல்வேறு  முக்கியமான விவகாரங்களை சக அமைச்சர்கள் மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசியிருப்பதால் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

இதில் அவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் உள்ள ஆடியோக்கள் விரைவில் வெளியாகுமோ? என்ற அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சர்களின் செல்போன்களை ஹேக் செய்த சர்வரை தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் பிரதான கட்சி ஒன்றிற்காக செயல்பட்ட தேர்தல் வியூக நிறுவனமும் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியது. 

தவெக தலைமை உத்தரவு:

இந்த விவகாரம் குறித்து தகவலறிந்த கட்சித் தலைமை இதுகுறித்து ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், தவெக நிர்வாகிகள் செல்போன்களில் முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சாதகமாக மாற்றவும் முயற்சி:

விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு எதிர்கால திட்டங்களை தீட்டி வரும் சூழலில் இந்த ஒட்டுக்கேட்பு விவகாரம் அவர்களுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு தக்க சமயத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவெக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை தங்களுக்கே சாதகமாக திருப்புவது குறித்தும் அக்கட்சியின் தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வரும் சூழலில், ஆடியோவில் ஏதேனும் சிக்கிக்கொண்டால் அது அரசுக்கு சவாலை உண்டாக்கும் என்பதால் கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அனைவரையும் மிக கவனமாக செயல்படுமாறும் தலைமை அறிவுறுத்தியுள்ளது.