CM Vijay: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தவெக தொண்டர் உயிரிழப்பு..
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டு ஜார்ஜ் வில்லியம் ஜேசுராஜ் தீவிரமாக செயல்பட்டார். பதவியேற்க காலதாமதம் ஆனதால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில், இன்ப அதிர்ச்சியில் அக்கட்சி தொண்டர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 5 கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி தமிழ்நாட்டின் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. கடும் இழுபறிக்குப் பின் மே 10ம் தேதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் உற்சாகமாக கொண்டாடினர்.
திருச்சியில் சோக சம்பவம்
இதனிடையே திருச்சியில் விஜய் முதலமைச்சரான இன்ப அதிர்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதியான நவலூர் குட்டப்பட்டுவின் வண்ணாங்கோவின் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம் ஜேசுராஜ். 32 வயதான இவர் அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். ஜார்ஜ் வில்லியம் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக சிறு வயதில் இருந்தே இருந்துள்ளார்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கியதும் அதில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக செயல்பட்டார். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சியின் வெற்றிக்காக பல்வேறு இடங்களிலும் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். இந்த தேர்தலில் தவெக அதிக | இடங்களை வென்றதால் ஜார்ஜ் வில்லியம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் தனிப்பெரும்பான்மை இல்லாததால் விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
அதனால் மிகப்பெரிய அளவில் மனஉளைச்சலில் இருந்த ஜார்ஜ் வில்லியம், விஜய் எப்போது முதலமைச்சராக பதவியேற்பார் என்பதை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்தார். அதன்படி மே 10ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்றதை ஜார்ஜ் வில்லியம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து டிவியில் பார்த்துக் கொண்டு தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
தவெக தொண்டர்கள் அஞ்சலி
உடனடியாக அவரது மனைவி டயானா ஜார்ஜ் வில்லியமை அருகிலுள்ள மருத்துவனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இன்ப அதிர்ச்சியில் அவர் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியமுக்கு 4 வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளது. இதில் ஒரு குழந்தைக்கு வாய் பேச முடியாத நிலை இருக்கிறது. வயதான பெற்றோர், வாய் பேச முடியாத குழந்தை என குடும்பத்தின் மொத்த சுமையையும் ஜார்ஜ் வில்லியமே தனியாளாக கவனித்து வந்துள்ளார். இதனிடையே உயிரிழந்த ஜார்ஜ் வில்லியம் உடலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் ஜார்ஜ் வில்லியம் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















