தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த மதிமுக, விசிக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது வெளியேறிவிட்டன. 

Continues below advertisement

தவெக கூட்டணி:

மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர மற்ற கட்சியினர் தற்போது தவெக கூட்டணியில் அங்கம் வகித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த சூழலில், தவெக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் விஜய், வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர், காதர் மொய்தீன் ஆகிய கூட்டணி கட்சித் தலைவர்களும், அந்தந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

Continues below advertisement

ஒருங்கிணைப்பாளர் யார்?

புதியதாக அமைந்துள்ள இந்த கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கலாம்? கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்றும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக வெற்றிக்கான சமூகநீதி கூட்டணி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எந்த பெயரும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை.

அதேசமயம், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்கலாம்? என்பதிலும் ஒருமித்த கருத்து எழவில்லை என்று கூறப்படுகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களிலே மூத்தவரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவை நியமிக்க வேண்டும் என்று மதிமுக-வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

விஜய் முடிவு என்ன?

ஆனால், சமூகநீதிக்கான கூட்டணி என்பதை வெளிப்படுத்தும் விதமாக விசிக தலைவர் திருமாவளவனை நியமிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால், ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் அரசியல் அனுபவம் நிறைந்தவர்கள் என்பதால் யாரை தேர்வு செய்யலாம்? என்பதிலும் விஜய்க்கு சவால் எழுந்துள்ளது.

இந்த சூழலில், விரைவில் இந்த கூட்டணியின் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் தவெக தலைமையிலான இந்த புதிய கூட்டணியின் பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்தி தேர்தலைச் சந்திக்க தவெக வியூகம் வகுத்து வருகிறது.