நாகையில் சுனாமி 19ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பேரை அடக்கம் செய்த சுனாமி ஸ்தூபில் மும்மத சிறப்பு பிரார்த்தனை, உயிரிழந்த உறவுகளுக்கு பிடித்த உணவு வகைகளை படையல் இட்டு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

 

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் 6065 பேர் உயிரிழக்க காரணமான சுனாமி 8.35 மணியளவில் ஏற்பட்டது. கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக 2004 ஆம் ஆண்டு கேரளா ஆந்திரா, கர்நாடகா கோவா, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து, அவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி பார்த்த நிலையில் கடற்கரைப் பகுதிக்கும் சென்றனர். அப்போது ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து சென்றது. சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வேளாங்கன்னி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



 

தொடர்ந்து வேளாங்கன்னியில் சுனாமியால் உயிரிழந்த 1000க்கும் அதிகமானோரை ஒரே இடத்தில் அடக்கம் செய்த வேளாங்கண்ணி ஆர்ச்யில் உள்ள சுனாமி ஸ்தூபில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள்  கடற்கரையிலிருந்து அமைதிப் பேரணியாக 3 கி.மீ சென்று அஞ்சலி செலுத்தினர். மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்தனர். சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்து போனாலும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்து இருந்து வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபியில் கதறி கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தியும் மாலைகளை வைத்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.