சேலம் ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் அமைந்திருந்தது. தமிழக திரை உலகின் வரலாற்று சிறப்புமிக்க இடமாக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் திகழ்ந்து வந்தது. மறைந்த இயக்குனர் டி.ஆர்.சுந்தரத்தின் அவர்களால் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது. குறிப்பாக தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் , முதல் கலர் படம், முதல் இரட்டை வேடம், முதல் திகில் படம், முதல் சமூகப் படம், முதல் விளம்பரப் படம், தமிழ்நாட்டின் முதல் ஆங்கிலப் படம் என பல்வேறு சிறப்புகளை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் ஆளுமைகளை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியதும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான். வெற்றிகரமாக பல படங்களை தயாரித்தாலும் மாடர்ன் தியேட்டர்ஸ் பிற்காலத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தது. டி.ஆர்.சுந்தரத்தின் இறப்பிற்கு பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் முழுமையாக மூடப்பட்டது.



இத்தகைய சிறப்புமிக்க மாடர்ன் தியேட்டர் அமைந்திருந்த இடத்தில் தற்போது வர்மா கன்ஸ்டிரக்ஷன் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தபோது, அவரது தந்தையும் தமிழகத்தில் முன்னாள் முதல்வருமான கருணாநிதி திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் நுழைவாயிலை பார்வையிட்டு அதனுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதோடு முதல்வர் ஸ்டாலின் அவரது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை பகிர்ந்தார்.


இந்த நிலையில் சேலம் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் நெடுஞ்சாலை துறை இடத்தில் உள்ளதாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையால் கல் நடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வர்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் விஜயவர்மா, "கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் சேலம் வந்தபோது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலில் நின்று செல்பி எடுத்துக் கொண்டார். அன்று இரவு மாவட்ட ஆட்சியர் தொலைபேசி மூலமாக அழைத்து முதல்வர் சந்திக்க அழைத்ததாக கூறினார். அப்போது, முதல்வர் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என கேட்டார். குடும்பத்தினருடன் கலந்து பேசி விட்டேன் முடிவு சொல்வதாக கூறினேன். 



அதன் பின்னர் பல்வேறு தரப்பினர் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் அழைத்துப் பேசினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் மாடர்ன் தியேட்டர் நுழைவாயில் அமைந்துள்ள இடத்தில் மட்டும் அளவு எடுக்கப்பட்டு இதை அரசுக்கு சொந்தமான இடம் என கல் நடப்பட்டது. கடந்த ஆண்டு அரசு வழங்கிய வரைபட ஆவணத்தில் நுழைவாயில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது. ஆனால் தற்போது வருவாய் துறை, மாநகராட்சி நிர்வாகம் மற்றும், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து அடக்குமுறையை கையாண்டு கல் நாட்டி உள்ளனர். சட்டப்படி, முறையான நவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இந்த செயலில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரடியாக அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும், சிலை வைக்க இடம் தராததால் இது போன்ற காரியங்களில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.


இதன் தொடர்ச்சியாக, வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தங்களுக்கு சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தையும் வீட்டு வசதி வாரியத்தின் நிலம் என்று கூறி முடக்கி உள்ளனர். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி உயிருடன் இருக்கும் போது, மாடர்ன் தியேட்டர் நினைவு சின்னத்தை பராமரிக்குமாறு தங்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக இன்று வரை பழமை மாறாமல் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை பராமரிப்பு செய்து வருகிறோம். மேலும், அந்த இடத்தில் மாடர்ன் தியேட்டர் நினைவாக சம்மந்தப்பட்ட இடத்தில் அதனை உருவாக்கிய டி.ஆர்.சுந்தரத்தின் சிலை மற்றும் மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினிமா தயாரிக்கும் நினைவு பொருட்களை அருங்காட்சியகமாக வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறினார்.