தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


நேற்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன், “தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது மேலும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் மற்றும் ஒரு வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் அநேகா இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.   இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. நேற்றைய தினம் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 4 மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை விடப்பட்டது. 


மேலும் இன்றைய தினம் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 






இந்நிலையில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூட இலேசான முதல் மிதமான மழை பெய்யும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மிதமான - கனமழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான /  மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


தமிழக   கடலோரப்பகுதிகள்,    மன்னார்    வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.