தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ தமிழக வரலாற்றில் முதல்முறையாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22ம் ஆண்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், புரதச்சத்து மிகுந்த பயறு வகைகளின் சாகுபடி மற்றும் உற்பத்தியை உயர்த்தும் வகையில் “பலன் தரும் பயறு உற்பத்தி திட்டம்” அறிவிக்கப்பட்டது.


இதன் ஒரு பகுதியாக, அறுவடைக் காலங்களில் விளைபொருட்களின் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகைகளை 61 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




இதன்படி, தற்போது காரீப் ( ஏப்ரல் முதல் செப்டம்பர்) பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. “விலை ஆதரவுத்திட்டம்” மூலம் பயறு வகைகளை குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில இணைப்பு முகமையாகவும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பிரதான கொள்முதல் நிலையங்களாகவும், நாபெட் நிறுவனம் மத்திய கொள்முதல் முகமையாகவும் செயல்படும்.


2021-22ம் ஆண்டு பருவத்தில் 4 ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 3 ஆயிரத்து 367 மெட்ரிக் டன் பச்சைப் பயறும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. உளுந்துக்கு கிலோ ஒன்றிற்கு ரூபாய் 63-ம் பச்சைப்பயறுக்கு ரூபாய் 72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். துவரையைப் பொறுத்தவரை தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ளதால், அறுவடை முடிந்தவுடன் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.




கொள்முதலுக்காக கொண்டு வரப்படும் உளுந்து, பச்சைப்பயறு ஈரப்பதம் 12 சதவீதத்தில் இருக்குமாறு நன்கு உலரவைத்து சுத்தம் செய்து, நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருத்தல் வேண்டும். உளுந்து கொள்முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 31 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், பாசிப்பயறு கொள்முதல் சேலம், நாமக்க், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் கடந்த 1-ந் தேதி தொடங்கி வரும் 90 நாட்கள் மேற்கொள்ளப்படும்.  


இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார அட்டை மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகிப் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் உளுந்து, பாசிப்பயறுக்கான தொகை அவர்களது வங்கிக்கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.