தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Continues below advertisement

வயது சரிபார்ப்பு கட்டாயம்

சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மதுப் பழக்கம் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில்:

  • மது வாங்க வரும் நபரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால், விற்பனையாளர்கள் அவரிடம் உரிய வயதுச் சான்றிதழைப் கேட்டுப் பெற வேண்டும்.

    Continues below advertisement
  • ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் (Driving License), வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைச் சரிபார்த்த பின்னரே மது வழங்க வேண்டும்.

  • 21 வயது பூர்த்தியாகாத நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மது விற்பனை செய்யக் கூடாது என்பதில் பணியாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

துறை ரீதியான நடவடிக்கை எச்சரிக்கை

இந்த விதிமுறைகளை மீறும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விதிமீறல் கண்டறியப்பட்டால் பணியிடை நீக்கம்  உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு தீவிரம்

ஒவ்வொரு கடையின் முன்பும் "21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்பனை செய்யப்படமாட்டாது" என்ற வாசகம் அடங்கிய அறிவிப்புப் பலகையைத் தெளிவாகத் தெரியும்படி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட மேலாளர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் அவ்வப்போது கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள் என்றும், அப்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

717 டாஸ்மாக் கடைகள் மூடல்: 

தவெக ஆட்சி பொறுப்பெற்றதிலிருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 717 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த விதி ஏற்கெனவே அமலில் இருந்தாலும் தற்போது மீண்டும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்கிற உத்தரவு பறந்ததுள்ளது. அரசின் இந்த அதிரடி உத்தரவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.