தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

விஜய் முதலமைச்சராவதில் முட்டுக்கட்டை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வென்ற தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு விஜய் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து நேரிலும் சந்தித்தார். 

Continues below advertisement

ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தைப் பொறுத்தவரை 118 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் விஜய்க்கு 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதில் திமுக கூட்டணி இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி அந்த கூட்டணியை முறித்து இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேர் ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.

ஆளுநரை இரண்டாவது நாளாக விஜய் இன்றும் சந்தித்தார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்காமல் எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் விஜயிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தார். எனினும் ஆளுநர் பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ,க்களின் கடிதங்கள் இருந்தால் தான் அழைக்க முடியும் என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அரசியல் சிக்கல் எழுந்துள்ளது. 

மெரினாவில் போராட்டமா?

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் ஆளுநர் அர்லேகருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சி போல விஜய்க்கு ஆதரவாக மற்றொரு போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக ழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். கடற்கரை உள்சாலைப் பகுதிக்கு வரும் அனைத்து பாதைகளும் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.