உள்ளாட்சி தேர்தலை சரியான நேரத்தில் அதிமுக அரசு நடத்தாததால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில், “மத்திய அரசிடமிருந்து வரும் வருவாய் குறைந்துவிட்டது. அதுவும் பின்னடைவாக உள்ளது.  இப்படி பல நெருக்கடி உள்ளது. அரசாங்கம் கைக்கு வராத பணம், பெரிய கார்ப்பரேட்டிடம் உள்ளது. அது பொதுமக்களுக்கான துரோகம். அந்த வரி வருவாய் அரசுக்கு வர வேண்டும். மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் பணம் படைத்தவர்கள் கட்டக்கூடிய நேர் முக வரியை குறைத்து மறைமுகவரியை அதிகரித்து சாமானியர்களிடம் இருந்து வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் கார்ப்பரேட்டுகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கம் லாபம். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தாலும், வரி எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்று பார்த்தாலும் மத்திய அரசின் வரி வசூல் நியாயம் அற்றது. மத்திய அரசின் மானியம் வரும் அதை செலவிட அவர்கள் அறிவுறுத்துவார்கள். வரி அதிகமாக, மானியம் குறைவாக முன்பு வந்து கொண்டிருந்தது. இப்போது வரியை குறைத்துவிட்டார்கள். குறிப்பாக செஸ் வரியை குறைத்துவிட்டனர். ஒரு லிட்டர் பெட்ரோலில் வரி மூலம் 1.40 பைசா தான் மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. 31 ரூபாயை மத்திய அரசு வரியாக எடுத்துக்கொள்கிறது. 20 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு இன்னும் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. கேட்டுக்கொண்டிருக்கிறோம். இலவச திட்டங்களுக்கு, மோட்டார் வாங்குவதற்கு வழங்கப்படும் மானியத்திற்கு பெரிய தொகை செல்கிறது. வழங்கப்படும் மானியத்திற்கான சரியான தகவல் இல்லை. தவறான நபர்களுக்கு சென்றிருக்கிறது. சிஸ்டம் அந்த மாதிரி உள்ளது. மாநிலங்களிடம் வருமான வரி தொடர்பான டேட்டா பேஸ் இல்லை. இதனால் யார் வரி செலுத்துகிறார்கள், செலுத்தவில்லை என்பது எங்களுக்கு தெரிவதில்லை. ஊராட்சி, நகராட்சிகளில் வரி வருவாய் குறைந்துள்ளது. சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இது முக்கிய காரணம். சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சிகளும் 1200 கோடி ரூபாய்க்கு மேல் மின்சார பாக்கி உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்திலும் இது போன்ற நிலை உள்ளது. இதற்கு காரணம் வருவாய் பற்றாக்குறையே. அரசு போக்குவரத்து கழகமும், மின்சார வாரியம் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளனர். டீசல் தொடர்ந்து அதிகரித்தாலும் பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் மட்டுமே பெரிய காரணமில்லை. மேலாண்மை பணிகள் ஒரு காரணம். ஓய்வூதியமும் கடனுக்கு காரணம். பெண்களுக்கு இலவச பயணம் வழங்கியதால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் ஏற்படவில்லை. அதற்கு முன்பிருந்தே நஷ்டத்தை சந்தித்து வருகிறது.மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் 1200 கோடியை செலுத்தவில்லை.அரசுப்பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் 59 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின் துறையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட இழப்பு 34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் ஆட்சியில் 1.34 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மின்சாரதுறையில் திமுக ஆட்சியில் 34 ஆயிரம் கோடி ரூபாயும், அதிமுக ஆட்சியில் 1.34 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது” என்றார்.


அரசு போக்குவரத்து கழகமும், மின்சார வாரியம் மட்டும் 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளதாக கூறியுள்ளதால், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயரம் என்று சூசகமாக கூறியுள்ளார்.