தமிழ்நாட்டில் சட்டமன்ற தேரதல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

நாளை மறுநாளே கடைசி:

இந்த சூழலில், தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாளே கடைசி நாள் ஆகும். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் என முக்கிய  தலைவர்கள் அனைவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், அந்தந்த கட்சி நிர்வாகிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான வேட்பாளர்கள் நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாளுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவாக உள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 7ம் தேதி நடைபெறும்.

Continues below advertisement

இறுதிவேட்பாளர்கள் பட்டியல்:

வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் வரும் 9ம் தேதி ஆகும். இந்த தேதிக்குள் ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனுவைத் திரும்ப பெறுவார்கள். அதன்பின்னர், இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும். இந்த தேர்தலில் முதன்முறையாக தேர்தல் களத்தில் களமிறங்கும் தவெக மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், சீமான் காரைக்குடியிலும், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகள் மட்டுமின்றி அமைச்சர்கள், பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளும் மிகவும் கவனத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்? என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடக்கிறது. 

அனல் பறக்கும் தேர்தல்:

தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கும் குறைவாகவே இருப்பதால் தினசரி ஒவ்வொரு தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், சீமான், விஜய் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் ஒவ்வொரு தினமும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால், நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் அரசியல் களம் அனல்பறந்து வருகிறது. வேட்பாளர்கள் விசித்திரமாக வாக்கு சேகரிப்பதும், பரப்புரையில் ஈடுபடுவதும் அரங்கேறி வருகிறது. பணப்பட்டுவாடாவைத் தடுப்பதற்கு பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.