MK Stalin: தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்.. தாங்க மாட்டீங்க.. பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.,க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டைப் பாதிக்க மாதிரி நடந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விஷயத்தில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் அவ்வளவு தான் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டின் வாசல் வரை வந்து விட்ட பேராபத்தை பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். தேர்தல் பரப்புரைக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்த கடமையை என்னால் தவிர்க்க முடியாது. ஏப்ரல் 16ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூடுகிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வலுக்கட்டாயமாக கூட்டப்படுகிறது என சொல்லலாம். தொகுதி மறுவரையறை தொடர்பான சட்ட திருத்தத்தை இந்த சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் போகிறார்கள்.
முதலில் இருந்தே இந்த சட்டத்திருந்தம் பற்றி எச்சரிக்கை விடுத்தோம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதனால் பாதிப்படையக்கூடிய மாநில முதலமைச்சர்களையும், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் சென்னை அழைத்து கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்துனோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்துங்க, அளவா குழந்தையை பெத்துக்கோங்க, குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கோங்கன்னு மத்திய அரசு சொன்னதை எல்லாம் நாங்க கேட்டோம்.
Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 14, 2026
மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை!#TNwillFightTNwillWin pic.twitter.com/v9wkYYM6MO
சொன்னதை ஒழுங்கா செஞ்சா அதற்கு தண்டனை கொடுப்பீர்களா?, தென் மாநிலங்கள் இதனால் பாதிப்படையக்கூடாது என நாடாளுமன்றத்தில் உத்தரவாதம் கேட்டோம் கிடைக்கவில்லை, பல்வேறு கட்சி எம்பிக்கள் பிரதமரை நேரில் சந்திக்க கேட்டோம், அதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு எந்த மாநிலத்துடனும் ஆலோசனை நடத்தாமல் இதனை செயல்படுத்த பார்க்கிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட யாருக்குமே பதிலிளில்லை. இது ஜனநாயக படுகொலை செயல். இந்த தொகுதி மறுவரையறைப் பற்றி எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இப்படி மறைத்து மறைத்து செய்தால் ஏதோ ஆபத்து இருக்குன்னு தென் மாநில மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.
நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.,க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டைப் பாதிக்க மாதிரியோ, வட மாநிலங்கள் அரசியல் வலிமையை வாரி வழங்குவது மாதிரி நடந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடு ஸ்தம்பிக்கும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காரும். என்னோட தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். இது தேர்தல் காலம் என்பதால் இவர்கள் கவனம் அதில் தான் இருக்கும் என டெல்லியில் அமைதியா தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை செய்து விடலாம் என நினைக்காதீர்கள்.
நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டுமல்ல, திமுக தலைவர். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டி இருக்கும். தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். சுய மரியாதை, மாநில உரிமைகள் தான் முக்கியம். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவை திரும்பி பார்க்க வைப்பேன். பிரதமர் மோடிக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















