ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க திட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அதனை ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மக்கள் வீடுகளில் ஏ.சி.யை அதிகம் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதேபோல கடைகளில் ஏசி விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதாக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


இதற்கிடையே ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்க திட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ள ராமதாஸ், அதனை ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


இதுகுறித்து  பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:


''தமிழ்நாட்டில் குளிரூட்டி, நீர் சூடாக்கி உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால், அதற்காக அபராதம் விதிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக மின்சார வழங்கல் விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது!


வரைவு விதிகளின்படி ஒரு வீட்டின் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 கிலோ வாட்டாக இருந்து, அதைவிட அதிகமாக 7 கிலோ வாட் அளவுக்கு மின்சாரம் எடுக்கப்பட்டால், எத்தனை முறை கூடுதலாக மின்சாரம் எடுக்கப்படுகிறதோ, அத்தனை முறையும் தண்டம் செலுத்த வேண்டும். இரு மாத மின்சாரக் கட்டணத்தில் ஒரு விழுக்காடு அபராதமாக பெறப்படும். ஓராண்டில் மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தினால், அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளைக்கு இணையானது!


அபராதம்  விதிப்பது நியாயமற்றது


குளிரூட்டி உள்ளிட்ட கருவிகளுக்காக  பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம்  வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது அதற்கும் கூடுதலாக அபராதம்  விதிப்பது நியாயமற்றது.  ஏற்கனவே ரூ.12,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்தகைய சூழலில் அதிக மின் பயன்பாட்டுக்காக அபராதம்  விதித்தால் மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது!


மாதத்திற்கு ஒருமுறை மின்சாரக் கட்டணம் கணக்கிடப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் சேவை நோக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மக்களை கொடுமைப்படுத்தும் வகையில் கட்டண சுமையை ஏற்றக் கூடாது. எனவே, அதிக மின்சாரம் எடுப்பதற்காக தண்டம் விதிக்கும் முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும்.''


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.