சூடாகும் அரசியல் களம்; வெல்லப் போவது யாரு? ஆத்தூரில் முத்திரை பதிக்குமா அதிமுக?
TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கு வரும் நிலையில், ஆத்தூர் தொகுதியை கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

TN Election 2026: ஆத்தூர் தொகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமாரை களமிறக்க அதிமுக பரிசீலித்து வருகிறதாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:
மீண்டும் ஆட்சி அமைக்கும் உத்வேகத்துடன் அதிமுக, ஆட்சியை கை நழுவவிட்டு விடக்கூடாது என்ற முயற்சியில் திமுக, மதில் மேல் பூனையாக இரட்டை நிலைப்பாட்டில் காங்கிரஸ், தனித்து களம் காண முடிவெடுத்த நாம் தமிழர் கட்சி மற்றும் புது வரவாக வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் என வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்தோடு,பிரதமர் மோடி அழைத்து வந்து சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பரப்புரையையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டார். மற்றொருபுறம் திமுகவோ கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளை தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வேட்பாளர்கள் பரிசீலனை தீவிரம்:
கட்சிகளை மட்டுமல்ல மக்களையும் தேர்தல் ஜுரம் பற்றிக்கொண்டுள்ளது. எந்தெந்த தொகுதியில் யார் களம் காணப்போகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் தொகுதியில், அவர்களை எதிர்த்து களம் காணப்போவது யார் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
குறிப்பாக நட்சத்திர தொகுதியான திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுகவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான எம்.உதயகுமாரை வேட்பாளராக நிறுத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
ஐ. பெரியசாமி Vs உதயகுமார்?
கடந்த தேர்தலில் 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் ஐ.பெரியசாமி, அதுமட்டுமல்ல தொகுதியில் எந்தவொரு சுப துக்க நிகழ்வு என்றாலும் நேரில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த தனிப்பட்ட நெருக்கமானது அவரின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டாலும், தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. மற்றொருபுறம் 2006 முதல் 2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததும், இதனை எதிர்த்து ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதும் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது.
மேலும் ஐ.பெரியசாமி மகள், மருமகள், மருமகன் வீடுகளில் நடைபெற்ற ஜி.எஸ்.டி நுண்ணறிவுப்பிரிவுப் சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனை மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் ஆத்தூர் தொகுதியில் இழந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்க திட்டமிட்டுள்ள அதிமுக, முன்னாள் எம்.பி.யான எம்.உதயகுமாரை களமிறக்க திட்டமிட்டுள்ளது.
உதயகுமாரின் பலம்...
எம்.உதயகுமார் எம்.பி.,யாக இருந்த போது, கொடைரோட்டில் பாஸ்போர்ட் அலுவலகம், திண்டுக்கல்லுக்கு தேஜஸ் ரயில், காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து ரூபாய் 150 கோடி நிதியை பெற்றுக் கொடுத்தது, அடுக்கம் பகுதியிலிருந்து பெரியகுளம் வரை 110 கோடி ரூபாய் மதிப்பில் மலைப்பகுதியில் சாலை, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டை ஊராட்சி பகுதியை மாண்புமிகு பாரத பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் தத்தெடுத்து எம்.பி நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் திட்டப் பணிகளை நிறைவேற்றியது, ஆத்தூர் காமராஜர் அணையை குடிநீர் தேவைக்காக தூர்வாரி, புதிய ஷட்டர் அமைத்தது, சோலைக்காடு – பன்றிமலை இடையே தார் சாலை அமைத்தது, NH 209 (புதிய எண் 183) ல் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி சாலை அமைத்தது, ஒட்டன்சத்திரம் - அரப்பிள்ளை இடையே 12 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய புறவழிச் சாலை அமைத்தது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கியது என மக்களுக்காக களத்தில் நின்றதை தொகுதி மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர்.
ஆத்தூரை கைப்பற்றுமா அதிமுக?
தொகுதி மக்களிடம் எம்.உதயகுமாருக்கு இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கு ஒருபுறம் என்றால், பெண்களுக்கு மாதம் ரூ.2000 உரிமைத்தொகை, முதியோருக்கான ஓய்வூதியம் ரூ.2000, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து போன்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முத்தான வாக்குறுதிகள் நிச்சயம் ஆத்தூர் தேர்தல் களத்திலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























