கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் உரையாற்றி வருகிறார். 


அந்த உரையில், “ஒரு குவிண்டால் நெல் சன்ன ரகம் ரூ.2,060, சாதாரண ரகம் ரூ.2,015க்கு கொள்முதல் செய்யப்படும். இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.62 கோடியில் ஒன்றிய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும். ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் ரூ.12.44 கோடி செலவில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்படும். டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும். சூரிய சக்தியால் இயங்கும் 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நடப்பு ஆண்டில் நிறுவப்படும்.


வேளாண்மை பெருமையை இளம் சந்ததியினர் அறிய சென்னையில் ரூ.2 கோடியில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்திற்கு 25 லட்சம் ரூபாய் செலவில் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். முதல் கட்டமாக இந்த ஆண்டு 2500 இளைஞர்களுக்கு ஒட்டுக்கட்டுதல் ,பதியம் போடுதல், கவாத்து செய்தல் பசுமை குடில் பராமரித்தல் நுண்ணீர் பாசன அமைப்பு பராமரித்தல் தோட்டக்கலை இயந்திரங்கள் இயக்குதல் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்குதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும்.


இத்திட்டத்திற்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதை களையும் ஒரு லட்சம் பனை மரங்களை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டில் 1.7 லட்சம் ஹெக்டேரில் பருத்தி சாகுபடி மேற்கொண்டு சுமார் 4 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்யவும் சந்தை விலை குறையும்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாளொன்றுக்கு 50 மெட்ரிக் டன் திறனுள்ள பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும். நடப்பாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆயிரத்து 100 உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்து வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய ஒரு குழுவுக்கு 5 லட்சம் வீதம் மூலதன நிதி வழங்கப்படும்.


 






பயிர்க்காப்பீடு திட்டத்தில் விரைவில் 2ஆவது தவணையாக ரூ.1,248.92 கோடி காப்பீடு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும். அரவை பருவத்தில் 1 டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு ரூ.150 வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயர்த்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் காய்கறி பயிரிடவும் 1000 ஹெக்டேர் பரப்பளவில் கீரை சாகுபடி மேற்கொள்ள மானியம் வழங்கப்படும். 3.13 லட்சம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக்குழு தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும்.


குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அடைந்து கொள்வதற்கு ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும். காய்கறிகள் குறைவாக சாகுபடி செய்யக்கூடிய 2000 கிராமங்களில் மண் வளத்தை மேம்படுத்தி 1250 ஹெக்டர் பரப்பில் காய்கறி பயிரிடவும், அனைத்து மாவட்டங்களிலும் 100 ஹெக்டர் பரப்பில் கீரை சாகுபடி மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கவும் மானியம் வழங்கப்படும். 1,700 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில் நீரோட்டத்தை அதிகரிக்க தூர் வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ரூ.2 கோடியில் பலாப்பயிருக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும். கடலூர், திண்டுக்கல், ஈரோடு புதுக்கோட்டை, தஞ்சாவூர் திருநெல்வேலி, திருச்சி, வேலூர் கரூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பேரூராட்சிகளிலும் நகர்ப்புறங்களிலும் சிறிய அளவிலான 10 உழவர் சந்தைகள்  6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். உழவர் சந்தை கழிவுகளை உரமாக்கும் திட்டம் 25 உழவர் சந்தைகளில் ரூ.2.75 கோடியில் செயல்படுத்தப்படும்.


சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து மாநகராட்சிகளில் பரிட்சார்த்த முறையில் முதற்கட்டமாக 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் வாங்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது இரண்டு லட்சம் வழங்கப்படும். கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருபத்தி எட்டு உலர்களங்கள் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.


முருங்கை பெருமளவில் விலையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர்,  மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை முருங்கை காண ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்படும். கிருஷ்ணகிரி ஜீனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும்” என்று கூறினார்.