சென்னையை போல திருவாரூரிலும் நடந்த அதிசயம்.. வறுமையில் நேர்மை காட்டிய தூய்மைப் பணியாளர் துரை! 20 சவரன் நகை திருப்பிக் கொடுத்த நெகிழ்ச்சி!
சென்னையில் ஒரு பத்மா போல, திருவாரூரில் வறுமையில் நேர்மையாக இருந்த தூய்மை பணியாளர் துரை. கீழே கிடந்த 20 சவரன் தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு.

சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த வரை பலர் பாராட்டினர். கடந்தாண்டு நடந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.
தற்போது, அதேபோல ஒரு சம்பவம் திருவாரூரில் நடந்துள்ளது. மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த 20 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களை ஆட்டோவில் வரும்போது குடும்பத்தினர் தவற விட்டுள்ளனர். கீழே கிடந்த நகை பையை நேர்மையுடன் எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையைச் சேர்ந்த குடும்பம்
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்கு கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவரது மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் நேற்று இரவு சென்னையில் இருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் மூலம் வந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை அவர்கள் திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட விருப்பாச்சி தெருவில் உள்ள உறவினர் வீட்டில் குளித்துவிட்டு ஆட்டோவில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது ராதாகிருஷ்ணன் மகள் அக்சயா தேவி திருமணம் திருத்துறைப்பூண்டியில் மார்ச் 8-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை உறவினர் வீட்டில் கொடுத்து வைப்பதற்காக கையோடு பை ஒன்றில் எடுத்து வந்துள்ளனர்.

20 சவரன் தங்க நகை வெள்ளிப்பொருட்கள்
அந்த பையில் 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை கையில் எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆட்டோவின் பின்பக்கம் வைத்து இருந்த கட்டை பையை எடுத்து வந்தபோது அது தவறி கீழே விழுந்துள்ளது. இந்த நிலையில் விருப்பாச்சி நடப்பு தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் திருவாரூர் ஆண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் அந்த கட்டைப் பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே, . இதுகுறித்து திருவாரூர் நகராட்சி அலுவலகத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
தங்க நகையை ஒப்படைத்த தூய்மைபணியாளர்
இதனையடுத்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே, காவல்துறையினர் அந்த இடத்திற்கே சென்று அவரிடம் இருந்து நகைகளை கைப்பற்றி திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து உரியவர்டம் நகையை ஒப்படைத்துள்ளனர். மேலும் நேர்மையுடன் செயல்பட்டு நகை பையை எடுத்துக் கொடுத்த தூய்மை பணியாளர் துரைக்கு திருவாரூர் நகர காவல் நிலையம் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து புத்தாடை எடுத்துக் கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

தங்க நகை கிடைத்தவுடன் அம்மா, மகள் கண்ணீர்விட்டு அழுதியது காண்போரை கலங்க செய்தது. நகையை ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு உரிமையாளர் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் வறுமையிலும் நேர்மையுடன் செயல்பட்டு நகைப் பையை எடுத்துக்கொடுத்த துரைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.























