திருப்பத்தூரில் டிப்பர் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்திலி அருகே லாரியை முந்தி செல்ல நினைத்தபோது மாணவியின் தலையின் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தோழிகளான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவரையும் அதேபோல ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது கந்திலி அருகே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட போது எதிரே வந்த ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தின் மீது லேசாக உரசியதில் நிலை தடுமாறி லாரியின் முன்பு மூன்று பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது மாணவி ரம்யாவின் மீது டிப்பர் லாரி ஏரி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த சக்திவேல் மற்றும் பிரியங்காவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரண்டு பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியர் எக்ஸாம் எழுத சென்ற நிலையில் டிப்பர் லாரி மோதி மாணவியின் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.