நாய் கடிச்சதுக்கு ‘இந்தா 100 ரூபாய் புடி ஊசி போட்டுக்கோ’ என கேவலமா பேசுறாங்க - பரிதாபமாக சொன்ன சிறுமி
என்ன போல குழந்தைகளை நாய் புரட்டி புரட்டி கடிக்குது நடவடிக்கை எடுங்க சார்! நாய் கடிச்சதுக்கு இந்தா 100 ரூபாய் புடி ஊசி போட்டுக்கோ என கேவலமா பேசுறாங்க! பள்ளி சீருடையில் சிறுமி மனு

திருப்பத்தூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி சிறுமி பள்ளி சீருடையில் வந்து மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டி புரட்டி கடித்த நாய்
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகள் நிவேதிதா (12). இந்தச்சிறுமி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பள்ளி சீருடையில் வந்து மனு ஒன்று அளித்தார்.
அந்த மனுவில், தாங்கள் கிராமத்தில் பவுனம்மாள் ,ராஜ்கமல் என்பவர் வளர்த்த வரும் நாய் 15 க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது. அதேபோல என்னையும் புரட்டி புரட்டி கடித்தது. இதுகுறித்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘இந்தா நூறு ரூபா வச்சுக்கோ போய் ஊசி போட்டுக்கோ’ என கேவலமா பேசுறாங்க .
இதுகுறித்து இதற்கு முன்பாக நாயை அப்புறப்படுத்த வேண்டும் என மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தயவு செய்து என்னை போல் குழந்தைகளை கடிக்கும் இந்த நாயை அப்புறப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறுமி பள்ளி சீருடையில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் தொடரும் நாய்களின் அட்டகாசம்
தமிழ்நாட்டில் தெரு நாய்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. தெருநாய்களின் அட்டகாசத்தால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தெரு நாய்களை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து, பல தரப்பு மக்கள் கோரிக்கை வைத்தாலும் இதுவரை அரசு சார்பில் முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது.
தமிழ்நாடு கால்நடைத்துறை தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை போன்ற ஒரு சில பெரு நகரங்களில் மட்டும் தெரு நாய்களுக்கு "ரேபிஸ்" தடுப்பூசி போடப்படுவதாகவும், பிற இடங்களில் போடப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
6.50 லட்சம் பேர் பாதிப்பு
தொடர்ந்து நகர் பகுதிகளை காட்டிலும் கிராமப் பகுதிகளில், நாய்க்கடிகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய் கடிகளால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது, அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நாய் கடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.80 லட்சமாக இருந்தது. இதில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, 43 பேர் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டு நாய் கடியால், பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 6.50 இலட்சமாக உயர்ந்துள்ளது. நாய் கடிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 33 ஆக உள்ளது. 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ரேபிஸ் உயிரிழப்புகள் குறைவாக இருந்தாலும், கூடுதலாக 1.70 லட்சம் மக்கள் நாய் கடியால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.























