வாழ வேண்டிய வயதில் இது தேவையா? கெத்து காட்ட நினைத்த இளைஞர்கள்... கடைசியில் நேர்ந்த சோகம்
திருப்பத்தூரில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 2 வாலிபர்கள் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அருகே மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 2 வாலிபர்கள் உயிரிழந்த நிலையில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுக்கா, கே.பாப்பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடி மகன் திருப்பதி (18), பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்த பூபதி மகன் திருப்பதி (20), அத்திமரத்து கொட்டாய் கிராம பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் தரணிஷ் (17) ஆகிய 3 பேரும் நேற்று இரவு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு அவர்கள் மத்தியில் கெத்து காட்டுவதற்காக பிளண்டர் பைக்கில் 3 பேரும் அமர்ந்து கொண்டு வாலிபர்களுக்கு இடையே தலைக்கேறிய போதையில் தறி கெட்டு ஓடியதில் சாலையோர பள்ளத்தில் 3 பேரும் விழுந்ததில் வேடி மகன் திருப்பதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தம் வெளியாகி உள்ளது.
பூபதி மகன் திருப்பதிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 3 பேரும் சாலையில் விழுந்ததை பார்த்த சக நண்பர்கள் சிலர் ஓட்டம் பிடித்துள்ளனர். அதில் சிலர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து அருகில் உள்ள திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று பேரையும் அனுமதிக்கப்பட்டனர். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த திருப்பதி வரும் வழியிலேயே இறந்துள்ளார்.
மற்றொரு திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தரணிஷ் என்ற 17 வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களோடு சேர்ந்து தலைக்கேறிய போதையில் தறி கெட்டு பைக் ஓட்டியதால் பரிதாபமாக இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.























