இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.  குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி சென்னை – திருநெல்வேலி இடையே கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே இரண்டு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும் இந்த ரயில்கள் பல முக்கிய நிலையங்களில் நின்று சேவை வழங்கும். கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்னை மற்றும் திருநெல்வேலி இடையே இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் ஏப்ரல் 16 இன்று முதல் ஏப்ரல் 30 வரை இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிவேக சிறப்பு ரயில் ஏப்ரல் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். மீண்டும், ஏப்ரல் 17, 24 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரிலிருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி சந்திப்பு, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். மற்றொரு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் ஏப்ரல் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

மீண்டும், ஏப்ரல்  20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.00 மணிக்கு திருநெல்வேலியை அடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். கோடை விடுமுறையின்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவையை பூர்த்தி செய்து, கூட்ட நெரிசலை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.