நீங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என பாஜக முன்னாள் தமிழக தலைவர் தமிழிசைக்கு, திருச்சி சூர்யா கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். 

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாஜக 21 இடங்களில் போட்டியிட்ட நிலையில் அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் வாக்குகள் பிரிந்ததே தவிர பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் கடந்த கால தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாஜக இந்த தேர்தலுக்கு முன்பாக அதனை முறித்து தனியாக போட்டியிட்டது. இதுவும் அக்கட்சி வெற்றி பெறாததற்கு காரணமாக சொல்லப்பட்டது. இதனை பாஜகவின் தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரிக்கும் வகையில் பேசினார். 

 

மேலும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், “நான் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகள் மாதிரி யாராவது தெரிந்தால் நான் அவர்களை ஊக்குவிக்க மாட்டேன். சில மாவட்டங்களில் கட்சி பதவியில் இருப்பவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.கட்சியில் கடினமாக உழைக்க கூடியவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார். இது தலைவராக உள்ள அண்ணாமலையின் முடிவாக பார்க்கிறேன்” என தெரிவித்தார். இது மிகப்பெரிய அதிர்வலைகளை பாஜகவில் உண்டாக்கியுள்ளது. தமிழிசையை அண்ணாமலை ஆதரவாளர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக பாஜகவில் மாநில நிர்வாகியாக உள்ள திருச்சி சூர்யா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன். கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

 

தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம். அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா? பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா? இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம்” என திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.