விழுப்புரம் : சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமான தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-32 ), இரவு நேர பயண பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 93 கி.மீ. தொலைவிற்கு அதிநவீன ஸ்மார்ட் தெருவிளக்கு அமைப்பு (Smart Street Lighting System) நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கியப் நுழைவுவாயிலாகவும், தினசரி பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் முதன்மைச் சாலையாகவும் திகழ்வது தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை (NH-32) ஆகும். இந்தச் சாலையில் இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 93 கிலோமீட்டர் தொலைவிற்கு அதிநவீன ஸ்மார்ட் தெருவிளக்கு அமைப்பு (Smart Street Lighting System) அமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு முற்றுப்புள்ளி

இந்த 93 கி.மீ. நீள நெடுஞ்சாலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பல தெருவிளக்குகள் முறையாக இயங்கவில்லை என்றும், பழுது ஏற்பட்டால் அதை உடனடியாகக் கண்டறிய முடியாத நிலை நிலவுவதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். மேலும், குறிப்பிட்ட நேரத்திற்கு ஊழியர்கள் நேரில் சென்றுதான் விளக்குகளை இயக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் பல இடங்களில் நீண்ட தூரத்திற்கு இருள் சூழ்ந்து காணப்பட்டதால், இரவு நேரங்களில் குறிப்பாக கனரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கார்களில் செல்வோர் கடுமையான விபத்து அபாயத்தைச் சந்தித்து வந்தனர். இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

IoT மற்றும் தானியங்கித் தொழில்நுட்பம்

புதிய ஸ்மார்ட் அமைப்பின் கீழ் மனித தலையீடு இன்றி, சூரியன் மறையும் நேரத்தைக் கணக்கிட்டு தெருவிளக்குகள் தானாகவே எரியும் மற்றும் அணையும் தானியங்கி தொழில் நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், சாலையில் உள்ள ஒவ்வொரு விளக்குக் கம்பமும் IoT (Internet of Things) எனப்படும் இணையவழி கண்காணிப்பு வலையமைப்புடன் இணைக்கப்படும். இதற்காகச் பிரத்யேகமாக 24 மணி நேரமும் இயங்கும் மையக் கட்டுப்பாட்டு அறையும், நேரலை கண்காணிப்பு டாஷ்போர்டும் (Live Dashboard) உருவாக்கப்படுகிறது.

உடனடி பழுது எச்சரிக்கை அமைப்பு

எங்காவது ஒரு விளக்கு செயலிழந்தாலோ அல்லது மின்சார உபகரணங்களில் கோளாறு ஏற்பட்டாலோ, அதுகுறித்த தகவல் உடனடியாக மையக் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கைச் செய்தியாக (Alert) அனுப்பப்படும். இதனால் பராமரிப்புப் பணியாளர்கள் முழுச் சாலையையும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டிய அவசியமின்றி, கோளாறு ஏற்பட்ட குறிப்பிட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று உடனடியாகப் பழுதைச் சரிசெய்ய முடியும்.

சீரமைப்பு மற்றும் புதிய தெருவிளக்குகள் விவரம்

மொத்த திட்டத்தின் நீளம்: 93 கிலோமீட்டர்

சீரமைக்கப்படும் பகுதி: சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பழைய விளக்கு அமைப்புகள் முற்றிலும் புதுப்பிக்கப்படும்.

புதிய விளக்குகள்: வெளிச்சமே இல்லாத சுமார் 19 கி.மீ. இடைவெளிகளில் புதிதாக மின் கம்பங்களும், ஸ்மார்ட் விளக்குகளும் அமைக்கப்படும்.

கூடுதல் வெளிச்சப் புள்ளிகள்: இரவு நேரப் ஆய்வின் அடிப்படையில், போதிய வெளிச்சம் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் விளக்குகள் நிறுவப்படும்.

பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் 'ஹை-மாஸ்ட்' விளக்குகள்

அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்லும் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு வெளிச்ச அளவீட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், சுங்கச்சாவடிப் பகுதிகளில் ஓளிரும் வகையில் அதிக திறன் கொண்ட எல்.இ.டி. (LED) விளக்குகள் மற்றும் பிரம்மாண்ட ஹை-மாஸ்ட் (High Mast) கோபுர விளக்குகள் அமைக்கப்பட உள்ளன.

மின் சேமிப்பு மற்றும் சீரான பராமரிப்பு

இந்த அதிநவீன அமைப்பின் மூலம் மின்சாரப் பயன்பாடு, சாதனங்களின் ஆயுட்காலம் மற்றும் செயல்திறன் ஆகியவை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். தேவையின்றி விளக்குகள் எரிவது தவிர்க்கப்படுவதால் அதிகளவிலான மின்சாரமும், பராமரிப்புச் செலவுகளும் மிச்சமாகும்.

தாம்பரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஸ்மார்ட் லைட்டிங் திட்டத்தின் மூலம் இரவு நேரப் போக்குவரத்து விபத்துகள் பெருமளவில் குறைக்கப்பட்டு, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் இரவுநேரப் பயணம் மிகவும் பாதுகாப்பானதாகவும், தடங்கலற்றதாகவும் மாறும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.