விழுப்புரம்: வானூர் அருகேயுள்ள தலக்காணிகுப்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு செம்மண் எடுப்பதை தடுக்கக்கோரி கிராம மக்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தனர்.
தலக்காணிகுப்பம் செம்மண் குவாரி
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள தலக்காணிகுப்பத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக செம்மண் குவாரி செயல்பட்டு வருகிறது. செம்மண் குவாரி அமைக்கும் போதே கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இரண்டு மீட்டர் மட்டுமே ஆழம் மட்டுமே எடுக்கப்படும் என உறுதி அளித்து செம்மண் எடுத்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
ஆனால் செம்மண் குவாரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 10 மீட்டர் ஆழத்திற்கு செம்மன் எடுப்பதால் கால்நடைகள் மேய்சலுக்கு செல்லும் போதும் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பிற்குள்ளாவதினால் செம்மண் குவாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி கிராம மக்கள் புகார் அளித்தும் கனிமவளத்துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் கிராம மக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு மிரட்டல்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் செம்மண் குவாரி குறித்து புகார் தெரிவித்தால் அதன் உரிமையாளர் வினோத் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கிராம மக்களை ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்து அனுப்பி வைத்தனர்.