பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!

தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்

Continues below advertisement

 

Continues below advertisement

உலகத் தமிழர் யாவருக்கும் பொங்கல் வாழ்த்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த 
இனிய பொங்கல் விழா வெறும் கொண்டாட்டத்திற்கான பண்டிகையாக மட்டும் இல்லாமல்; தமிழ்ச்சமூகத்தின் உயரிய மாண்புகளை மென்மேலும்  செழுமைப் படுத்துவதற்கான "பண்பாட்டுக் கூடலாகவும்" விளங்குகிற ஒன்றாகும்.

தமிழினத்தின் மாண்புகளில் உயரியது " யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் சிந்தனை முதிர்ச்சியாகும்.  அத்தகைய பக்குவம் , முதிர்ச்சி மென்மேலும் பல்கிப் பெருக வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் , பால் போன்ற அடையாளங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வது, வெறுப்பு அரசியலை விதைப்பது, ஆதாயநோக்கில் அதனைப் பரப்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது தமிழினத்தின் மாண்புகளுக்குப் பெருமை சேர்க்கும்.  

அத்தகைய பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம். 

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம்.

தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக பெரியார் என்ன புரட்சி செய்தார் எனவும் தமிழ், தமிழ்நாடு பற்று இல்லாதவர் பெரியார் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக சாடியிருந்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் சீமானுக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல் சீமான் மீது பல்வேறு காவல்நிலையங்களில் பல்வேறு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சர்ச்சையான கருத்து பேசியதாகவும், வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஆனாலும் சீமான் பெரியாரை வசைபாடுவதை நிறுத்திய பாடில்லை. 

Continues below advertisement