OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
திமுக-வில் கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விருப்பமனு தாக்கல் செய்திருப்பது கட்சியினருக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் இன்னும் இரு மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக-வில் இணைந்தார்.
ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு சீட்டா?
ஜெயலலிதாவின் விசுவாசி, அம்மாவின் உண்மைத் தொண்டன் என அதிமுக தொண்டர்களால் கருதப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுக-வில் இணைந்தது பேரதிர்ச்சியை அதிமுக-வினருக்கு ஏற்படுத்தியது. தனது மற்றும் தனது மகனின் அரசியல் எதிர்காலம் கருதியே அவர் திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட போடிநாயக்கனூர் தொகுதியிலும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆண்டிப்பட்டி மற்றும் போடி தொகுதியிலும் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர், மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கு போட்டியிட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. அவரது செல்வாக்கில் அவரது மகனுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.
அப்செட்டில் தேனி மாவட்ட திமுக:
இது தேனி மாவட்ட திமுக-வினர் இடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது. தேனி மாவட்டம் என்பது எம்ஜிஆர் காலம் முதலே அதிமுக-வின் கோட்டையாகவே இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரான பின்பும் இரட்டை இலையின் செல்வாக்கு தேனி மாவட்டத்தில் பெரியளவிலே இருந்து வருகிறது.
இதனால், கடந்த அரைநூற்றாண்டு காலமாக செல்வாக்கு மிகுந்த அதிமுக-விற்கு எதிராக திமுகவினர் பலரும் கடினமாக கட்சிப் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், வரும் தேர்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பல காலமாக திமுக-வில் இருந்தவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால், திடீரென கட்சியில் இருந்து கட்சி மாறி வந்த ஓ. பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனும் விருப்பமனு தாக்கல் செய்திருப்பது பல காலமாக திமுக-வில் இருக்கும் தேனி மாவட்டத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன செய்யப்போகிறது திமுக தலைமை?
கட்சித் தலைமையும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனுக்கு போட்டியிடவே வாய்ப்பு வழங்கும் என்று கருதப்படுவதால் அவர்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த மக்களவைத் தேர்தலில் தங்கத்தமிழ்ச் செல்வனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கே தேனி மாவட்ட திமுக-வில் அதிருப்தி உண்டாகியது.
தற்போது, ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகனுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்த அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இதை கட்சித் தலைமை எப்படி சரி செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக-வைப் பொறுத்தமட்டில் பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் மிக எளிதாக வழங்கப்படுவதாகவும், கட்சிக்காக பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது.























