தமிழ்நாடு உயர்க்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.


 கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில்  அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த லோகநாதன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.   


மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்:  


விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில்   குற்றம் சாட்டப்பட்டுள்ள பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.சந்திரசேகரன்,  அனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும்,  ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கவுதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு இன்று அதாவது ஆகஸ்ட் 16 ஆம் தேதி விசாரிக்கப்பாடும் என கூறி உத்தரவிட்டார்.  


அமலாக்கத்துறை சோதனை:  


கடந்த மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின் அவரை அமலாக்கத்துறையினர் விசாரணை செய்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிதாரர்களுக்கு சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் அள்ளுவதற்கான உரிமம் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் பெறப்பட்ட வருமானம் பினாமி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளாக டெபாசிட் செய்யப்பட்டது. PT Excel Mengindo என்ற இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்திற்கு விலைக்கு வாங்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் M/s Universal Business Ventures FZE  என்ற நிறுவனமும் வாங்கப்பட்டுள்ளது.  


அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில் சந்தேகத்திற்கு இடமான  ஆவணங்கள், வெளிநாட்டு பணம் ரூ.13 லட்சம் (தோராயமாக), கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது.  இதுதொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்ட பணம் குடும்பத்திற்குச் சொந்தமான மருத்துவமனைக்குச் சொந்தமானது என கூறப்பட்டது. 


பொன்முடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சட்டவிரோத வருமானம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு  தொடர்புடைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.