ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார் வழக்கில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் இன்றும் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக உள்ளார்.


சென்னை கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  புகாரளித்தும் ராஜகோபாலன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் சந்தேகம் அடைந்த அசோக் நகர் மகளிர் போலீசார், தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்பினர். இதனைத்தொடர்ந்து, நேற்று பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலாவிடம் மூன்று மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


இந்நிலையில், தனியார் பள்ளி முதல்வரை இன்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் காலை 11 மணிக்கு கீதா கோவிந்தராஜன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 


இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 354 ஏ (பாலியல் தொல்லை), தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, நீதிபதி அப்துல் பரூக், ராஜகோபாலனை ஜூன் 8ஆம் தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 




முன்னதாக, இந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக பணிபுரியும், ராஜகோபாலன் மீது பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டிருந்தார்.


அந்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பியதும், மாணவிகளுடனான ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணத்தில் மாணவிகளுக்கு அவர் பாடம் எடுத்ததையும் ஆதாரத்துடன் அவர் பகிர்ந்திருந்தார். மேலும், அவர் மாணவிகளை இரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்துவதும், திரைப்படங்களுக்கு செல்ல அழைப்பதும் என்று மாணவிகளுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது. முன்னாள் மாணவியின் இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புகார் தொடர்பாக உடனே விசாரிக்க வேண்டும் என்றும், ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


விசாரணையில், அவர் கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து இதுபோன்று ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவதும், அவர்களுக்கு ஆபாச படங்களின் இணைப்புகளை வகுப்பு குழுவிலே பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகோபால் இந்த பள்ளியில் தன்னைப் போன்றே மேலும் சில ஆசிரியர்கள் உள்ளதாகவும். அவர்களும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் வாக்குமூலம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.