வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள் சமூகத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவின் அடிப்படையில் நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு இந்த வழக்கை விசாரித்து 10.5 % இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன் அறிவித்தது.

 



 

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றன, இதில் கள்ளக்குறிச்சி, சேலம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பல மாவட்டங்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதேபோல் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பெண்ணாடம் , பண்ருட்டி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் சுமார் 11 தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் மர்ம நபர்களால் கல்வீச்சு நடத்தப்பட்டது, இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 



 

இந்த சூழலில் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்து உள்ள நெய்வேலியில் இருந்து வடலூர் நோக்கிவந்த வடலூர் நெய்சர் பேருந்து நிறுத்தம் முன்பாக அரசு பேருந்தை மது போதையில் இருந்த வடலூர் பகுதியில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மதி (எ) மதியழகன் என்பவர் அரசு பேருந்தை வழிமறித்து வன்னியர்களுக்கு வழங்கவேண்டிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் வழங்க வலியுறுத்தி பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார், அப்பொழுது திடீரென பேருந்தின் முன்பக்கம் சென்று முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து சேதப்படுத்தினார். இதனை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்தார் அந்த விடியோவானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

அதன் பின் இந்த சம்பவம் குறித்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் வடலூர் காவல்துறையிடம் புகார் அளித்ததன் பேரில் மதியழகனை வடலூர் காவல் துறையினர் கைது செய்து , பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த சம்பவத்தால் பேருந்தில் வந்த பயணிகள் பெரும் அச்சத்தில் கூச்சலிட்டனர் இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.