தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை,  கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


அதேபோல் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலைப்பகுதிகள்,  நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமின்றி வரும் 14 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தென் மண்டல வானிலை மையம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


காலை அதிகப்படியான வெயிலின் காரணமாக வெப்பச சலனம் உருவாகி சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால் தான் காலையில் நல்ல வெயிலும் மாலை நேரத்தில் நல்ல மழையும் பெய்து வருகிறது. ஆனால் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்பதால் கிழக்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழையின் அளவு குறையத்தொடங்கும். ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது புயல் உருவானால் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் ஏழுமலை (மதுரை) 10, பரமக்குடி (ராமநாதபுரம்) 6, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), பேரையூர் (மதுரை), வாலாஜா (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்) தலா 5,  ஆலந்தூர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.