கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் காலை 6.45 மணி யளவில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த ரயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் நிற்காது. இந்நிலையில், ரயில் நிலையத்தை கடக்கும் போது திடீரென அபாய சங்கிலியை பிடித்து ரயில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடைசி பெட்டியில் இருந்த அதிகாரிகள் பதட்டத்துடன் கீழே இறங்கினர். ரயில் திடீரென நிறுத்தப்பட்டதால் ரயிலில் இருக்கும் பயணிகள் கிழே இறங்கினர். அதேசமயம் வேறு ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் சற்று பதட்டம் அடைந்தனர்.

Continues below advertisement


ரயில் நிறுத்தப்பட்ட உடன் எஸ் 7 என்ற பெட்டியில் இருந்து இரண்டு திருநங்கைகள் கிழே இறங்கி ஓடத் தொடங்கினர். இந்த பெட்டியின் முன், பயணிகளும், டி.டி.ஆரும் நின்று கொண்டிருந்ததால் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாகர்கோவிலில் இருந்து ரயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் வலுக்கட்டாயமாக பணம் கேட்டுள்ளனர். இது பிடிக்காத சில பயணிகள் சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கும் திருநங்கைகளுக்கும் தகராறு ஏற்பட்டது.


அதை தொடர்ந்து திருநங்கைகள் இருவரும் இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க ரயிலில் இருக்கும் அபாய சங்கிலியை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் நின்றது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சறிது நேரம் பதற்றம் நிலவியது.


நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் ரெயில்களில் ஏறும் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், பணம் தர மறுப்பவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.