லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், விசாரணை நடத்தி தேனி மருத்துவ கல்லூரி முதல்வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவர் மீனாட்சி சுந்தரம் முதல்வராக (டீன்) உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவியது.


அந்த வீடியோவில், “ தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்படும் 4 தனியார் கேண்டீன்களுக்கு குடிநீர் வழங்குங்கள். எங்களால் கேண்டீன் நடத்த முடியவில்லை. நீங்க 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளீர்கள். ஏற்கனவே 6 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். தற்போது மீதம் இருக்கும் 4 லட்சம் ரூபாய் கொண்டு வந்துள்ளோம். வாங்கிக் கொள்ளுங்கள்” என கூறவே, அதற்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், “ நான் வாங்கி கொள்கிறேன், முதலில் நான் சொன்ன வேலையை செய்யுங்கள்” என கூறியுள்ளார்.


இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "இது அப்பட்டமான பொய். நான் யாரிடமும் பணம் பெறவில்லை. மருத்துவமனை கல்லூரிக்கே தண்ணீர் இல்லாத போது, 4 தனியார் கேண்டீன்களுக்கு தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இதனை கண்டுபிடித்து தண்ணீர் இணைப்பு துண்டித்து, மீட்டர் பொருத்தப்பட்டு தண்ணீர் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்தேன். மேலும் கேண்டீன் செயல்பட அனுமதிக்கப்பட்ட அளவை விட மருத்துவமனை இடத்தையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனையும் அகற்றும்படி உத்தரவிட்டேன். இந்த வீடியோவில் இருப்பது அப்பட்டமான பொய். எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இப்படி மார்பிங் செய்து எடுத்துள்ளனர். இந்த வீடியோவை எடுத்த நபர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்” என தெரிவித்தார்.


இதற்கிடையே லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில், மீனாட்சி சுந்தரத்தை தற்காலிக பணி இடைநீக்கம் செய்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், “ தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், அங்குள்ள உணவக உரிமையாளர் மாரிசாமியிடம் நடந்தது குறித்து விசாரணை செய்ய தேனி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் நேரில் சென்றுள்ளார். அப்போது வீடியோவில் வெளியான விஷயம் உண்மைதான் என தெரியவந்துள்ளது. இதனால் மீனாட்சி சுந்தரத்தின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.