அதிமுகவில் நிலவும் பிரச்னைகளால் மன உளைச்சலுக்குள்ளான  தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் தற்கொலை செய்துக் கொண்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது. 

Continues below advertisement

அதிமுகவில் நிலவும் பிளவு

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. பெரும்பான்மை இல்லாமல் தவித்த தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவளிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் ஒரு தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்தது. ஆனால் அவர் மறுத்த நிலையில் பிரச்னை வெடித்தது. மறுபக்கம் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியில் அமர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 

Continues below advertisement

அதிமுக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அணி - சி.வி.சண்முகம் அணியாக பிரிந்தது. இபிஎஸ் அணியில் 22 எம்.எல்.ஏ.,க்களும், சி.வி.சண்முகம் அணியில் 25 எம்.எல்.ஏ.,க்களும் இருந்தனர். இதனிடையே சி.வி.சண்முகம் அணியில் இருந்த 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் தவிர மீதமுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாயினர். 

வர்த்தக அணி இணைச் செயலாளர் தற்கொலை

இந்த நிலையில் அதிமுகவில் நிலவும் பிரச்னைகள் தொண்டர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொண்டர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தற்கொலை செய்துக் கொண்ட தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், அதிமுகவில் சில நாட்களாக நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரியான எளிய தொண்டர்கள் மிகுந்த மன வேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைக்க வேண்டும். என்னுடைய இறப்புக்குப் பிறகாவது கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒன்று சேர்ந்து மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வேண்டும்.

Also Read: சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?

என்னுடன் அரசியலில் பயணித்த தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய கழக செயலாளர், திருப்பனந்தாள் பேரூர் கழக செயலாளருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய கடைசி ஆசையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். மீண்டும் ஒரு ஜென்மம்ம் இருந்தால் நான் அதிமுக தொண்டனாக பிறக்கவே ஆசைப்படுகிறேன். விடைபெறுகிறேன்” என தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் பேரதிர்ச்சி

பூக்கடை மகேந்திரனின் இந்த முடிவால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுகவின் ராஜ் சத்யன் வெளியிட்ட பதிவில், ”தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்” என இரங்கல் தெரிவித்துள்ளார். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)