அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோயில்
தமிழகத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில்களுக்கு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கோயில் கும்பாபிஷேகம், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட கோயில் அறங்காவலர்கள் பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக அறங்காவலர்கள் நியமிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அறங்காவலர்கள் நியமனம்
இது தொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சட்டப்பிரிவு 46(ii) ன் கீழ் 39 திருக்கோயில்கள், சட்டப்பிரிவு 46(i) ன் கீழ் 267 திருக்கோயில்கள் மற்றும் சட்டப்பிரிவு 49(1)ன் கீழ் 3,463 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.அறங்காவலர் நியமன அறிவிப்பு, திருக்கோயில்கள் விவரம், தகுதிகள். விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி.?
விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 18.09.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அறங்காவலர் நியமன அறிவிப்பு என்பது வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு அல்ல. நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டப்பிரிவு 46(ii), 46(i) மற்றும் 49(1)ன்கீழ்உள்ள 3,769 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
