ஆளுநர் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த விவாகரத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் - மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 


தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சில தினங்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ”தமிழ்நாட்டு மக்கள் திறமையானவர்களை அங்கீகரிப்பதில்லை. ஆனால் மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் காண்டு ஆளுநராக பணிசெய்ய வாய்ப்பு கொடுக்கிறார்கள் எனத் தெரிவித்தார். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியிருந்தால் மத்திய அமைச்சர் ஆகியிருப்போம் என சொல்லியிருந்தார். 




அதனால் திறமையாளர்களை வீணடிக்க வேண்டாம் என்று ஆளுநர்களாக நியமிக்கிறார்கள். எங்கள் மீது தப்பில்லை” என தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், “ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார். 


இதற்கு பதிலளித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், “ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான். டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள் - தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல” என சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார். 




மேலும், “தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே. நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம். நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம். ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும். அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை. மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.” என்று  கூறியுள்ளார். 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் , ஒரு கட்சி அலுவலகம் கிடையாது என்றும், அது ஒரு பயிற்சி பட்டறை எனவும் குறிப்பிட்டார். அதற்கும் சேர்த்தே தமிழிசை தனது ட்வீட்டில் பதிலடி கொடுத்துள்ளார்.